சுங்கச்சாவடி கட்டிடம் மீது தனியார் பஸ் மோதல்; 50 பயணிகள் உயிர் தப்பினர்


சுங்கச்சாவடி கட்டிடம் மீது தனியார் பஸ் மோதல்; 50 பயணிகள் உயிர் தப்பினர்
x

ஜகலூர் அருகே சுங்கச்சாவடி கட்டிடம் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 50 பயணிகள் உயிர் தப்பினர்.

தாவணகெரே;


தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா கானனகட்டே கிராமத்தில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த நிலையில் நேற்று ஊழியர்கள் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புனேவில் இருந்து பெங்களூருவை நோக்கி 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

சுங்கச்சாவடி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பஸ் தறிகெட்டு ஓடியது. பின்னர் பஸ், சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்யும் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பக்கம் சேதமடைந்து கண்ணாடிகள் முற்றிலும் உடைந்தது.

ஆனாலும் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். மேலும் சுங்கச்சாவடி ஊழியர்களும் உயிர் தப்பினர். இந்த விபத்தால் சுங்கசாவடியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஜகலூர் புறநகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் போலீசார், பயணிகளை பத்திரமாக மீட்டு வேறு பஸ் ஏற்பாடு செய்து பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story