ரக்சாபந்தன் தினம்: பெண்களுக்கு இலவச பேருந்து பயண சலுகை; அரியானா அரசு அறிவிப்பு


ரக்சாபந்தன் தினம்:  பெண்களுக்கு இலவச பேருந்து பயண சலுகை; அரியானா அரசு அறிவிப்பு
x

அரியானா அரசு பேருந்துகளில், ரக்சாபந்தன் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள முதல்-மந்திரி அனுமதி அளித்து உள்ளார்.



சண்டிகர்,



ரக்சாபந்தன் தினம் ஆண்டுதோறும், சகோதரர் மற்றும் சகோதரியின் பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்சாபந்தன் தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு ராக்கி கயிறுகள் விற்பனையும் சூடு பிடித்து உள்ளது. இந்த நாளில், தனது சகோதரரின் மணிக்கட்டில் சகோதரி ராக்கி கயிறு கட்டுவது வழக்கம். சகோதரர் தன்னை பாதுகாப்பார் என்ற உறுதிமொழியையும் சகோதரி பெற்று கொள்வார். இதற்கு பதிலாக, ஓர் உறுதிமொழியுடன் சகோதரரும், தனது சகோதரிக்கு சில பரிசுகளை வழங்குவார்.

இதனை முன்னிட்டு அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், அரியானா அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை (11-ந்தேதி) அதிகாலை 12 மணி வரை பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டும், இதேபோன்றதொரு அறிவிப்பு அரசால் வெளியிடப்பட்டது. அரியானாவில் ரக்சாபந்தன் தினத்தில், பெண்கள் மற்றும் 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இலவச பேருந்து பயணம் செய்வதற்கான அனுமதியை முதல்-மந்திரி கடந்த ஆண்டு வழங்கினார். இதனால், சகோதரிகள் தங்களுடைய சகோதரர்களின் வீடுகளுக்கு சென்று ராக்கி கயிறுகளை கட்டி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


Next Story