மாநிலங்களவை எம்.பி.யாக சுதா மூர்த்தி பதவியேற்றார்


மாநிலங்களவை எம்.பி.யாக சுதா மூர்த்தி பதவியேற்றார்
x

Image Courtesy : ANI

தினத்தந்தி 14 March 2024 9:24 AM GMT (Updated: 14 March 2024 9:35 AM GMT)

தனது கணவர் நாராயண மூர்த்தி முன்னிலையில் சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார்.

புதுடெல்லி,

மாநிலங்களவையில் கட்சிகளின் பலம் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களை தவிர மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டோ அல்லது ஜனாதிபதியால் நேரடியாகவோ மாநிலங்களவைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படலாம். இலக்கியம், கலை, அறிவியல், சமூக சேவை ஆகியவற்றில் சிறப்பு பங்களிப்பை வழங்கியவர்களுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாருமான சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது 73 வயதாகும் சுதா மூர்த்தி குழந்தைகள் தொடர்பான பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.

இந்நிலையில் சுதா மூர்த்தி இன்று மாநிலங்களவை எம்.பி. ஆக பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் அவரது கணவர் நாராயண மூர்த்தி கலந்து கொண்டார். சுதா மூர்த்திக்கு மாநிலங்களவை சபாநாயகர் ஜகதீப் தன்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியின்போது அவைத் தலைவர் பியூஷ் கோயலும் உடனிருந்தார்.


Next Story