நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடைநீக்கம்: திருச்சி சிவா கண்டனம்


நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடைநீக்கம்: திருச்சி சிவா கண்டனம்
x

கோப்புப்படம்

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயல் என திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 18-ந்தேதி தொடங்கியது. விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளை எழுப்பி, முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், மாநிலங்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் உள்பட 19 பேரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேச விரும்பினால் அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். அதை செய்யாமல், நாடாளுமன்றத்திலிருந்து எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயல். எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை கேள்வி எழுப்புவோம்.

திமுக, திரிணமூல் காங்கிரஸ், உள்ளிட்ட 5 கட்சிகளை சேர்ந்த 19 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எந்த கோரிக்கையையும் ஏற்பதில்லை. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்படுவது சடங்காக மாறியுள்ளது. கூட்டத்தொடரின்போது பிரச்னைகள் குறித்து விவாதிக்க வாய்ப்பளிக்கப்படுவதில்லை. விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க நாங்கள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை" என்று அவர் தெரிவித்தார்.


Next Story