அறுந்து கிடந்த மின்கம்பி மோட்டார் சைக்கிளில் சிக்கியதில் ஆசிரியர் பலி


அறுந்து கிடந்த மின்கம்பி மோட்டார் சைக்கிளில் சிக்கியதில் ஆசிரியர் பலி
x

அறுந்து கிடந்த மின்கம்பி மோட்டார் சைக்கிளில் சிக்கியதில் ஆசிரியர் உயிரிழந்தார்.

திருச்சி

தா.பேட்டை:

ஆசிரியர்

திருச்சி மாவட்டம், தா.பேட்டையை அடுத்த பேரூர் மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் பெரியசாமி (வயது 33). இவர் தா.பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து அவர் வீட்டிற்கு திரும்பினார். இதையடுத்து பால் கறப்பதற்காக வீட்டில் இருந்து தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது தர்மராஜ் என்பவரது தோட்டத்தின் அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்தது. அதை கவனிக்காமல் சென்ற பெரியசாமியின் மோட்டார் சைக்கிளில் மின்கம்பி சிக்கிக்கொண்டதாக தெரிகிறது.

சாவு

இதில் பெரியசாமி மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த மின்வாரியத் துறையினர் அறுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்தினர்.

தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான ஜெம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story