விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த வாலிபர் பலி


விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த வாலிபர் பலி
x

விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த வாலிபர் பரிதாபமாக பலியானார்.

திருவள்ளூர்

பெரியபாளையம்,

கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுப்பாளையம் கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசிப்பவர் செல்லன். இவரது மகன் மோகன்பாபு (வயது 24). இவர் தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது அவரது விவசாய நிலத்தின் வழியாக சென்ற மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து விழுந்தது.

நேற்று காலை மோகன் பாபு வழக்கம் போல தனது விவசாய நிலத்திற்கு சென்றார். அப்பொழுது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் அதன் மீது மிதித்து விட்டார்.

இதில் மின்சாரம் தாக்கி அலறி துடித்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மின்வாரிய ஊழியருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் மோகன்பாபு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரணி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியான மோகன்பாபு உடலை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story