

சென்னை,
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் மகன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது குறித்து, தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், "அமலாக்கத்துறை பாஜகவின் ஒரு பிரிவாக மாறிவிட்டது என மக்கள் பேசிக் கொள்கிறார்கள். சோதனைக்கெல்லாம் அச்சப்படும் இயக்கம் திமுக அல்ல. அமலாக்கத்துறை சோதனையால் பாஜக மேலும் பலவீனம்தான் அடையும். தமிழ்நாடு அரசையும், தி.மு. கழகத்தையும் கொள்கை ரீதியாக எதிர்கொள்ள இயலாதவர் பிரதமர் மோடி." என்று கூறினார்.