தாழம்பூர் அருகே கல்லூரி மாணவர்களிடம் கத்தி முனையில் வழிப்பறி; 6 பேர் கைது


தாழம்பூர் அருகே கல்லூரி மாணவர்களிடம் கத்தி முனையில் வழிப்பறி; 6 பேர் கைது
x

கல்லூரி மாணவர்களிடம் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு

செல்போன்கள், பணம் பறிப்பு

வண்டலூர் - கேளம்பாக்கம் பிரதான சாலை மேலக்கோட்டையூர் பகுதியில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் யோகா படித்து வரும் கல்லூரி மாணவர்கள் 3 பேரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கல்லூரி மாணவர்களை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி அவர்களிடமிருந்து 3 செல்போன்கள், ரூ.400-ஐ பறித்து சென்றனர். இது குறித்து மாணவர்கள் தாழம்பூர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

கைது

இதில் இருசக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து வண்டலூர் அருகே உள்ள வெங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த அபினேஷ் (வயது 19), செல்வகுமார் (23), மோகன் (24), சூரியா(20), வேங்கடமங்களத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (19), சூரியா (21) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் தாம்பரம், பீர்க்கண்காரணை, கூடுவாஞ்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நிலுவையில் உள்ளதும், வழிப்பறியில் ஈடுபட்ட பின்பு செல்போன்களை குறைந்த விலைக்கு விற்று கஞ்சா, மது என உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளது தெரியவந்தது பின்னர் அவர்களிடமிருந்து 18 செல்போன்கள், வழிபறிக்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் போன்றவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story