தொண்டர்கள் வர விதிக்கப்பட்ட ஐகோர்ட்டு தடை நீங்கியது; அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு


தொண்டர்கள் வர விதிக்கப்பட்ட ஐகோர்ட்டு தடை நீங்கியது; அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு
x

தொண்டர்கள் வர விதிக்கப்பட்ட ஐகோர்ட்டு தடை நேற்றுடன் நீங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இன்று வர வாய்ப்பு இருப்பதால் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கலவரம்

அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்காக கடந்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது. அப்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியாக கட்சி அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்தனர்.

கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து அதிரடியாக அவர்கள் உள்ளே புகுந்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் - கலவரம் வெடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

கலவரத்தை தணிக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் வருவாய்த்துறை அதிகாரிகள் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 'சீல்' வைத்தனர். மயிலாப்பூர் தாசில்தார் ஜெகஜீவன்ராம் கட்டுப்பாட்டில் கட்சி அலுவலகம் கொண்டு வரப்பட்டிருந்தது.

அலுவலகத்துக்கு 'சீல்' அகற்றம்

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொரப்பட்டது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த 'சீல்' கடந்த மாதம் 20-ந்தேதி அகற்றப்பட்டு, அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே நேரத்தில் மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆகஸ்டு 20-ந்தேதி வரை (நேற்று) ஒரு மாத காலம் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு நிர்வாகிகளோ, தொண்டர்களோ செல்லக் கூடாது என்றும், அ.தி.மு.க. அலுவலகத்துக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு நிபந்தனை விதித்திருந்தது.

இந்த நிபந்தனையை சுட்டிக்காட்டி பதாகையும் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. தினமும் 10 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

எதிர்ப்பு அலை

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. அ.தி.மு.க. இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து மீண்டும் இணைந்து செயல்படலாம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இந்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டார். இதன் மூலம் இருதரப்பு ஆதரவாளர்கள் இடையே தொடர்ந்து மனக்கசப்பு இருந்து வருகிறது. எதிர்ப்பு அலையும் வீசிக்கொண்டிருக்கிறது.

தடை நீங்கியது

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கட்சி அலுவலகத்துக்கு செல்வதற்கான தடை நேற்றுடன் நீங்கி உள்ளதால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்பு ஆதரவாளர்களும் கட்சி அலுவலகத்திற்குள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலடி எடுத்து வைக்க வாய்ப்பு உள்ளது. அப்போது அவர்களிடையே மீண்டும் மோதல் உருவாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

எனவே அ.தி.மு.க. அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 2 போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். சூழ்நிலையை பொறுத்து கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story