குழந்தை திடீரென இறந்ததால் உறவினர்கள் மறியல்


குழந்தை திடீரென இறந்ததால் உறவினர்கள் மறியல்
x

ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் குழந்தை திடீரென இறந்ததால் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

குழந்தை சாவு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வெள்ளாள விடுதி அருகே மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மெய்யர். மெக்கானிக். இவரது மனைவி சுகன்யா (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் சுகன்யா பிரசவத்திற்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கடந்த 1-ந் தேதி பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை வென்டிலேட்டரில் வைத்து பராமரித்து வந்தனர். இந்தநிலையில் இன்று இரவு அந்த ஆண் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சுகன்யா, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மறியல்

இந்நிலையில் டாக்டர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாகவும், டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அவர்கள் மருத்துவமனை அருகே பழனியப்பா முக்கத்தில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானமடைந்த பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story