மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை


மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
x

மகளின் திருமணத்திற்கு வாங்கிய கடனை செலுத்த முடியாததால் மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

மீன் வியாபாரி

பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முகமது சலீம் (வயது 42), மீன் வியாபாரி. இவருக்கு நஜிமுனிஷா என்ற மனைவியும், ஷகிலாபானு, கத்திஜா ஆகிய 2 மகள்களும், முகமது அனீஷ் என்ற மகனும் உள்ளனர். ஷகிலாபானுவுக்கு திருமணமாகிவிட்டது. முகமது அனீஷ் பெரம்பலூரில் அரபி கல்லூரியிலும், கத்திஜா திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். முகமது சலீம் தனது மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை கட்ட வேண்டும் என்று கடந்த சில வாரங்களாகவே வீட்டில் உள்ளவர்களிடம் புலம்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி நஜிமுனிஷா தனது கணவர், 2-வது மகளுடன் பெரம்பலூரில் உள்ள அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்களிடம் முகமது சலீம் நான் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

விஷம் குடித்து தற்கொலை

இதனைதொடர்ந்து கத்திஜா தனது தந்தைக்கு போன் செய்தார். அப்போது அவர் உன்னை உனது அண்ணன் பார்த்து கொள்வான். நான் இருந்து என்ன செய்ய போகிறேன் என்று பேசி விட்டு வைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த நஜிமுனிஷா, தனது மகள் மற்றும் உறவினர்களுடன் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது முகமது சலீம் பூச்சி கொல்லி மருந்து (விஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முகமது சலீம் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளின் திருமணத்திற்கு வாங்கிய கடனை செலுத்த முடியாததால் மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story