மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 'தேர்தல் திருவிழா' தலைவியை ஓட்டுப்போட்டு மாணவிகள் தேர்ந்தெடுத்த ருசிகரம்


மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் தேர்தல் திருவிழா தலைவியை ஓட்டுப்போட்டு மாணவிகள் தேர்ந்தெடுத்த ருசிகரம்
x

மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் நடந்த தேர்தல் திருவிழாவில் மாணவிகள் தலைவியை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த ருசிகர சம்பவம் நடைபெற்றது.

சென்னை

மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓட்டுரிமை பற்றி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'பள்ளி தேர்தல் திருவிழா' 2-ம் ஆண்டு நிகழ்வாக நடைபெற்றது. தேர்தல் திருவிழாவிற்கு பள்ளி தாளாளர் கே.சந்திரமோகன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை ஜெகஜோதி முன்னிலை வகித்தார்.

தலைவி பதவிக்கு 6 மாணவிகளும், துணை தலைவர் பதவிக்கு 5 பேரும் போட்டியிட்டனர். வெற்றி பெறும் மாணவிகளின் பதவி ஏற்பு விழா வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது.

அதன்படி வகுப்பு தலைவி மற்றும் பள்ளி முழுவதற்குமான தலைவி பதவியில் போட்டியிட விரும்புபவர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து இருந்தனர்.

இதில் பொதுத்தேர்தல் போன்றே தனித்தனியாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. பூத் சிலிப் வழங்கப்பட்டு மாணவிகள் வரிசையில் நின்று, வாக்குச்சீட்டு மூலம் வாக்களித்தனர். ஓட்டு போட்ட மாணவிகளின் கை விரலில் அடையாள 'மை' வைக்கப்பட்டது.

அதன்பிறகு மாணவிகள் அளித்த வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் மாலை அறிவிக்கப்பட்டது. தங்கள் பள்ளி மற்றும் வகுப்பு தலைவியை ஓட்டுப்போட்டு தேர்வு செய்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக மாணவிகள் தெரிவித்தனர்.


Next Story