வரத்து அதிகரிப்பு: பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்தது - தள்ளுவண்டிகளில் 6 கிலோ ரூ.100-க்கு கூவி கூவி விற்பனை


வரத்து அதிகரிப்பு: பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்தது - தள்ளுவண்டிகளில் 6 கிலோ ரூ.100-க்கு கூவி கூவி விற்பனை
x

அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்ததின் விளைவாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்தது. தள்ளுவண்டிகளில் 6 கிலோ ரூ.100-க்கு கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை

சமையல் என்றாலே அதில் பிரதானமாக இடம்பெறும் காய்கறி என்றால் அது வெங்காயம் தான். சட்னி, சாம்பார், கூட்டு, பொறியல், அவியல் என என்ன உணவாக இருந்தாலும், உணவின் சுவையை கூட்டுவதே வெங்காயத்தின் சிறப்பு. என்னதான் மணக்க மணக்க பிரியாணி இருந்தாலும் தொட்டுக்க வைக்கப்படும் தயிர் வெங்காயம் தான் உணவையே சிறக்க செய்யும்.

இப்படி சிறப்புமிக்க வெங்காயம் அவ்வப்போது விலை உயர்ந்து மலைக்க வைக்கும். பின்னர் திடீரென விலை சரிந்து வியக்க வைக்கும். அந்தவகையில் தற்போது வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்து வியக்க வைத்திருக்கிறது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி சந்தையான சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையான பெரிய வெங்காயம், தற்போது ரூ.10-க்கு (மொத்த விலையில்) விற்பனையாகி வருகிறது. சில்லரை வியாபாரத்தை பொறுத்தவரையில் ரூ.12-க்கு வெங்காயம் விற்பனை ஆகிறது.

வெளிசந்தைகளில் ரூ.14 முதல் ரூ.18 வரை விற்பனை ஆகிறது. தெருக்களில், நடமாடும் தள்ளுவண்டி கடைகளில் 6 கிலோ ரூ.100-க்கு என கூடை கட்டிய வெங்காய மூட்டையை கூவி கூவி விற்பனை செய்யும் நிலைமை இருக்கிறது. முன்பெல்லாம் ஓட்டலில் பிரைட் ரைஸ் போன்ற உணவுகளிலும், ஆம்லெட்களிலும் வெங்காயத்துடன் முட்டைகோசை கலந்து கொடுப்பார்கள். கேட்டால், 'என்ன பண்றது விலை கட்டுப்படியாகவில்லை' என்பார்கள். இப்போதெல்லாம் புரோட்டாவுக்கு கூட சென்னையில் தயிர் வெங்காயம் கொடுக்கிறார்கள்.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் கூறியதாவது:-

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா பகுதிகளில் இருந்து வெங்காயம் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. தற்போது அந்த பகுதிகளில் நல்ல விளைச்சல் காரணமாக வரத்து அதிகரித்து இருக்கிறது.

ஆனால் அங்கு பெய்து வரும் தொடர் மழையால், 60 முதல் 70 சதவீதம் வரை சுமாரான சரக்கு தான் (லேசாக அடிபட்ட நிலையில்) வருகிறது. தரமான வெங்காயம் வரத்து குறைவாகவே இருக்கிறது.

இதனால் வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக இந்த ரக வெங்காயங்களே அதிகளவில் மார்க்கெட்டிலும், வெளிச்சந்தைகளிலும் வெகுவாக விற்பனையாகிறது. இவை ஓய்ந்து, தரமான சரக்கு மட்டுமே வரும்நிலையில் வெங்காயத்தின் விலை அடுத்த வாரமே உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எனவே வெங்காயம் விலை குறைவு நீண்ட நாட்கள் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது வெங்காயத்தின் விலை சரிவு காரணமாக, ஓட்டல்களை போலவே வீடுகளில் வெங்காயத்தின் நடமாட்டம் 'ஜாஸ்தி'யாகவே இருக்கிறது. இன்னும் சில நாட்கள் இந்த நிலை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வெங்காயத்தின் விலை சரிந்ததால் மகிழ்ச்சியில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு, இன்னும் சில நாட்களில் அதிர்ச்சி காத்திருக்கிறது என்பதையே வியாபாரிகளின் கருத்து மறைமுகமாக தெரிவிக்கிறது.

கிடங்கு வசதி தேவை - வியாபாரிகள் கருத்து

சென்னை கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகள் நலச்சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறியதாவது:-

வெங்காயம், தக்காளி போன்ற காய்கறி அடிக்கடி விலை உயரும். பின்னர் திடீரென குறையும். வரத்து பாதிக்காத நிலையிலும் வெங்காயத்தின் விலையேற்றத்தை ஓரளவு சமாளிக்க வழி இருக்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் 7 கிடங்குகள் உள்ளன. அதில் 2 மட்டுமே செயல்படுகின்றன. இவை முழுமையாக செயல்பட்டு, வெங்காயத்தை அதிகளவில் வாங்கி இருப்பில் வைத்தால், திடீர் விலையேற்றம் வரும்போது மக்களுக்கு குறைந்த விலையில் அதை பயன்படுத்தலாம். வெங்காயம் என்பது மட்டுமல்ல இதர காய்கறியையும் இப்படி பயன்படுத்தினால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story