சென்னையில் மாரத்தான் ஓட்டம்; போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு


சென்னையில் மாரத்தான் ஓட்டம்; போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு
x

போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக மாரத்தான் ஓட்டம் வரும் 6-ந்தேதி (நாளை மறுநாள்) காலை 4 மணி முதல் நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தை காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சர்தார் படேல் சாலை, ஓ.எம்.ஆர்., கே.கே.சாலை, இ.சி.ஆர். வழியாக சென்றடையும்,

இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெறும் நேரத்தில் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் அமலில் இருக்கும்.

* அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.

* போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாகனங்கள் கொடி மரச் சாலை சாலைக்கு வழியாக திருப்பி விடப்பட்டு வாலாஜா பாயின்ட் அண்ணாசாலையில் வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

* ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் கார்னர், ஆர்.கே.மட் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

* மத்திய கைலாஷில் இருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டது. அந்த வாகனங்கள் எல்.பி. சாலை, சாஸ்திரி நகர் வழியாக திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

* காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த வாகனங்கள் எல்.பி. சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

*பெசன்ட் நகர் 7-வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் எலியாட்ஸ் கடற்கரை நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்.ஜி. சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.

* மாநகர பஸ்கள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும். பெசன்ட் அவென்யூ, எம்.எல்.பார்க் நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story