மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.13½ கோடி கடனுதவி


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.13½ கோடி கடனுதவி
x

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.13½ கோடி கடன் உதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

திருவள்ளூரில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பொது மக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சினைகள் தொடர்பாக உதவிகள் வேண்டிய மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 87 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 35 மனுக்களும், வேலை வாய்ப்பு வேண்டி 39 மனுக்களும், பசுமை வீடு அடிப்படை வசதிகள் வேண்டி 61 மனுக்களும், இதர துறைகள் சார்பாக 76 மனுக்களும் என மொத்தம் 298 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தினார்.

மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக ஊரகப் பகுதியை சேர்ந்த 82 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டிலான கடன் உதவிகளையும், நகர்ப்புற பகுதியை சேர்ந்த 29 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3.48 கோடி மதிப்பீட்டிலான கடன் உதவிகளையும் என மொத்தம் 111 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.13.48 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிக்கான காசோலைகளை மகளிர் சுய உதவி குழுவினருக்கு கலெக்டர் வழங்கினார்.

முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்திர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story