செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
x

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

செங்கல்பட்டு

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கிராம மக்களிடம் இருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட 238 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அவர்களின் கோரிக்கையை பரிசீலித்து இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

வாழ்த்து பெற்றனர்

மேலும் கடந்த 3-ந் தேதி 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடமிருந்து மடிக்கணினி பெற்ற செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 12 மாற்றுதிறனாளிகளும், மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்விற்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்கான தமிழக அரசின் 'சிறந்த பணியாளர் விருது' பெற்ற ஜெ.சரஸ்வதி மற்றும் சிறந்த 'சுயதொழில் புரிபவருக்கான விருது' பெற்ற அன்னமேரி ஆகியோர் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ர.ராகுல் நாத்திடம் விருதை நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

பாராட்டு சான்றிதழ்

தொடர்ந்து தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 4 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையினையும், 9 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையினையும், மேலும் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டையை இணைக்கும் பணியினையும் சிறப்பாக மேற்கொண்ட அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) (பொறுப்பு) ) லட்சுமணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லலிதா, மாவட்ட மாற்றுதிறனாளி அலுவலர் செந்தில்குமாரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


Next Story