பிரதமர் மோடி இன்று திருச்சி வருகை


பிரதமர் மோடி இன்று திருச்சி வருகை
x
தினத்தந்தி 2 Jan 2024 12:24 AM GMT (Updated: 2 Jan 2024 2:39 AM GMT)

இந்த விழாக்களில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

திருச்சி,

பயணிகளுக்கான வசதியை மேம்படுத்துவதற்காக திருச்சி விமான நிலையத்தை ரூ.1,200 கோடியில் மத்திய அரசு விரிவுபடுத்தி உள்ளது. இந்த புதிய விமான முனையம் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 4 ஆயிரம் சர்வதேச பயணிகளையும், 1,500 உள்நாட்டு பயணிகளையும் கையாள முடியும்.

இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள திருச்சி புதிய விமான முனைய திறப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு, புதிய முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கியும் வைக்கிறார்.

முன்னதாக தனி விமானம் மூலம் இன்று காலை 10.10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, கார் மூலம் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

பின்னர் அங்கிருந்து பகல் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, புதிய முனையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். இந்த விழாக்களில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். விழா முடிந்ததும் பகல் 1.05 மணிக்கு பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ள திட்டப்பணிகளின் விவரம் வருமாறு:-

* திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) மத்திய அரசு நிதியில் ரூ.41 கோடி மதிப்பீட்டில் 253 அறைகளுடன் 4 மாடியில் கட்டப்பட்ட 506 மாணவர்கள் தங்குவதற்கான விடுதியை திறந்து வைக்கிறார். மேலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் செங்கல்பட்டு முதல் எண்ணூர்-திருவள்ளூர்-பெங்களூரு-புதுச்சேரி-நாகப்பட்டினம்-மதுரை-தூத்துக்குடி வரை 488 கிலோ மீட்டர் நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் 697 கிலோ மீட்டர் நீளமுள்ள விஜயவாடா-தர்மபுரி 'மல்டி புராடக்ட்' பெட்ரோலிய குழாய் திட்டம் ஆகிய இரு திட்டங்களும் முக்கியமானவையாகும்.

* ரூ.9 ஆயிரம் கோடியில் முடிவுற்ற இந்த திட்டங்களையும், கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.400 கோடியில் உருவாக்கப்பட்ட விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

* சேலம் - மேக்னசைட் சந்திப்பு - ஓமலூர் - மேட்டூர் அணைப்பிரிவில் 41.4 கிலோமீட்டர் இரட்டை ரெயில் பாதை திட்டம், மதுரை - தூத்துக்குடி இடையே 160 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரட்டை ரெயில்பாதை அமைக்கும் திட்டம், திருச்சி - மானாமதுரை - விருதுநகர் ரெயில்பாதை மின்மயமாக்கல், விருதுநகர் - தென்காசி சந்திப்பு மின்மயமாக்கல், செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - நெல்லை - திருச்செந்தூர் ரெயில்பாதை மின்மயமாக்கல் ஆகிய திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

* இதேபோல் தேசிய நெடுஞ்சாலை 81-ன் திருச்சி-கல்லகம் பிரிவில் 39 கிலோ மீட்டர் நான்குவழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 81-ன் கல்லகம் - மீன்சுருட்டி பிரிவின் 60 கிலோ மீட்டர் நீளத்துக்கு 4/2 வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 785-ன் செட்டிக்குளம் - நத்தம் பிரிவின் 29 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 536-ன் காரைக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 80 கிலோ மீட்டர் இருவழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 179ஏ சேலம்-திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையின் 44 கிலோ மீட்டர் நீளத்துக்கு நான்குவழிச்சாலை ஆகியவற்றையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

* இந்த சாலை திட்டங்கள் திருச்சி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேசுவரம், தனுஷ்கோடி, உத்திரகோசமங்கை, தேவிப்பட்டினம், ஏர்வாடி, மதுரை போன்ற தொழில் மற்றும் வணிக மையங்களின் இணைப்பை மேம்படுத்த உதவும். காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்குக்கப்பல் தங்குமிடம் 2-ஐ (ஆட்டோமொபைல் ஏற்றுமதி-இறக்குமதி முனையம்-2 மற்றும் துறைமுகம் அமைக்க தூர்வாரும் கட்டம்-5) பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

* இதேபோல் இந்திய எரிவாயு ஆணையத்தால் (கெயில்) கொச்சி - கூத்தநாடு - பெங்களூரு - மங்களூரு எரிவாயுக்குழாய் - 2 திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி முதல் கோவை வரை 323 கிலோ மீட்டர் இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டங்களுக்கும், சென்னை வல்லூரில் தரைவழி முனையத்துக்கான பொதுவழித்தடத்தில் 'மல்டி புராடக்ட்' குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

* தேசிய நெடுஞ்சாலை 332ஏ-வில் முகையூர் முதல் மரக்காணம் வரை 31 கிலோ மீட்டர் நீளத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்த சாலை தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள துறைமுகங்களை இணைக்கும் உலக பாரம்பரிய தலமான மாமல்லபுரத்துக்கு இந்த திட்டம் சாலை இணைப்பை மேம்படுத்தும். அத்துடன் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு சிறந்த போக்குவரத்து இணைப்பை இது வழங்கும்.

பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை 12 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 36 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story