செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு: இன்று மீண்டும் விசாரணை


செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு: இன்று மீண்டும் விசாரணை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 15 Feb 2024 1:26 AM GMT (Updated: 15 Feb 2024 5:42 AM GMT)

செந்தில் பாலாஜி வழக்கில் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை திருத்தி அமைத்துள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் வாதிட்டார்.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை ஐகோர்ட்டில் 2-வது முறையாக ஜாமீ்ன் கேட்டு தாக்கல் செய்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல் சி.ஆர்யமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார். இதுதொடர்பான அவர் தன் வாதத்தில், "செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் இந்த வழக்கில் சூழ்நிலைகள் மாறிவிட்டது. மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கில் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை திருத்தி அமைத்துள்ளது. இதுகுறித்து விசாரணையின்போதுதான் நிரூபிக்க முடியும். என் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் முதன்மை செசன்சு கோர்ட்டு கூறியிருப்பது தவறு.

அமலாக்கத்துறை திருத்திய ஆதாரங்களை நீக்கிவிட்டால் செந்தில்பாலாஜிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை. சந்தேகத்துக்கு இடமின்றி அவர் விடுதலை செய்யப்பட வேண்டும். ஏனென்றால் அமலாக்கத்துறையின் மொத்த வழக்கும் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட 'பென்டிரைவ், ஹார்டு டிஸ்க்' போன்றவற்றின் அடிப்படையிலேயே உள்ளது. சோதனையின்போது 5 மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்துள்ள நிலையில், கீழ் கோர்ட்டில் வேறு சாதனங்களை சமர்ப்பித்து உள்ளனர். பறிமுதலுக்குப்பிறகு அந்த மின்னணு சாதனங்களில் 67 பதிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

சோதனைக்குப்பிறகு 'பென்டிரைவ்' குறித்த அறிக்கையில் 284 கோப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மற்றொரு அறிக்கையில் அந்த 'பென்டிரைவில்' 472 கோப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆதாரங்கள் திருத்தப்பட்டது தொடர்பாக தற்போது நிரூபிக்க முடியவில்லை என்பதற்காக விசாரணை முடியும் வரை செந்தில் பாலாஜி சிறையிலேயே இருக்க வேண்டுமா? 'பென்டிரைவ்', 'ஹார்டு டிஸ்கில்' இருந்த கோப்புகள் அழி்க்கப்பட்டு, புதிய கோப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தடயவியல் துறையின் ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது. கையெழுத்து இல்லாத கடிதங்களை எல்லாம் ஆதாரமாக சேர்த்துள்ளனர்.

வேலை வாங்கி தருவதாகக்கூறி பணம் வசூலித்து அதை தனது உதவியாளர் சண்முகத்திடம் செந்தில் பாலாஜி வழங்கியதாக கூறுகின்றனர். ஆனால், அந்த சண்முகம் செந்தில்பாலாஜியின் உதவியாளரே கிடையாது. இந்த விவகாரத்தில் சட்டவிரோதமாக எந்தவொரு பணப்பரிமாற்றமும் நடைபெறவில்லை.

கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை அவருடைய வங்கிக்கணக்கில் ரூ.1.34 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாகவும், அது மோசடியாக ஈட்டப்பட்ட தொகை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்த தொகைக்கு முறையாக வருமான வரித்துறையிடம் கணக்கு காட்டப்பட்டுள்ளது. மேலும், பொருளாதார ரீதியிலான குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படக்கூடாது என பல்வேறு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. 240 நாட்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது.

தற்போது அவர் அமைச்சர் கிடையாது. புலன் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடுவார் என்றால் யாருக்குமே ஜாமீன் வழங்க முடியாது. செந்தில் பாலாஜியின் தம்பி தலைமறைவாக உள்ளார் என்பதற்காக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுக்க முடியாது. இதையும் பல்வேறு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இன்று விசாரணை

இவர் கூறிய குற்றச்சாட்டுக்களை மறுத்து, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிட்டார். அவர் 'இந்த வழக்கில் எந்த டிஜிட்டல் ஆதாரங்களையும் அமலாக்கத்துறை திருத்தவில்லை. அனைத்து ஆவணங்களும், சிறப்பு கோர்ட்டில் இருந்து பெறப்பட்டவைதான்' என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் தொடர் வாதத்துக்காக விசாரணையை இன்று (வியாழக்கிழமை) விசாரிப்பதாக உத்தரவிட்டார்.


Next Story