பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 'கிடு கிடு' சரிவு


பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் கிடு கிடு சரிவு
x

குமரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால், பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் ‘கிடு கிடு’ வென சரியத் தொடங்கி உள்ளது. இதனால் நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால், பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 'கிடு கிடு' வென சரியத் தொடங்கி உள்ளது. இதனால் நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பருவமழை69 சதவீதம் குறைவு

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவ காலங்களில் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய மாதங்களில் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை.

இயல்பான மழை அளவைவிட 69 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. மழை பெய்யாததால், மாவட்டம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு அவதிப்பட்டு வருகிறார்கள். மதியம் சாலைகளில் கானல் நீர் காட்சி அளிக்கிறது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் சரிவு

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் கடந்த 20-ந்தேதி 20.66 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதே சமயம் மழை பெய்யாததால் நீர்மட்டம் 'கிடு, கிடு' வென சரிந்து நேற்று காலை 18.28 அடியானது. அணைக்கு வினாடிக்கு 375 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 504 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 27.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 11.28 அடியாகவும். சிற்றார்- 2 அணையின் நீர்மட்டம் 11.38 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 10.30 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது. மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 12.20 அடியாகவும், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கருகும் பயிர்கள்

பாசன குளங்களிலும், நீர்மட்டம் கிடுகிடுவென சரியத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே அணைகள் மற்றும் பாசன குளங்களை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 6,000 ெஹக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது 3,000 ெஹக்டேரில் மட்டுமே நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. மீதமுள்ன 3,000 ஹெக்டேர் நெற்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் தேவைப்படுகிறது என்று விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

கால்வாய்களின் கடைமடை பகுதிகளில் தண்ணீர் வராததால் நெற்பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். அணையில் குறைவான தண்ணீர் உள்ளதையடுத்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.


Next Story