தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; சி.பி.ஐ. மேல்விசாரணை நடத்தி வருகிறது - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; சி.பி.ஐ. மேல்விசாரணை நடத்தி வருகிறது - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
x

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. மேல்விசாரணை நடத்தி வருவதாக தமிழக அரசு தெரிவித்தது.

சென்னை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந்தேதி நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022-ம் ஆண்டு மே 18-ந்தேதி தனது அறிக்கையை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பித்தது.

அதில், இந்த சம்பவத்துக்கு காரணமான 17 காவல் துறையினர், மாவட்ட கலெக்டர் உள்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரைத்திருந்தது.

ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது எனவும், ஏற்கெனவே வழங்கப்பட்ட தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடே போதுமானது எனவும் கூறி, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 17 வயது இளம் பெண் ஸ்னோலின் என்பவரின் தாய் வனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அமைதியான முறையில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில், மனுவில் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. மேல் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மனுதாரர் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை ஏப்ரல் 5-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் நீதிபதி செந்தில்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கக் கூடியவர்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்து புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டவர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.




Next Story