

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட குலமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த பிச்சை என்பவரின் மனைவி தவமணி (வயது 52). இவரது கணவர் மற்றும் ஒரு மகன் ஏற்கனவே இறந்து விட்டனர். இவரது மகள் உஷாராணி திருச்சி மாவட்டம் லால்குடியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் அவருடனும் தற்போது பேச்சுவார்த்தை இன்றி தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று தனது மகளை பார்க்க சென்றுள்ளார். ஆனால் அவரது மகள் தனது தாயை பார்க்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தவமணி தனது வீட்டிற்கு வந்து தூங்கினார்.
இந்தநிலையில் மறுநாள் காலை மர்மமான முறையில் தவமணி இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தவமணியை யாரேனும் கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.