‘அ.தி.மு.க.வின் முக கவசத்திற்கு பின்னால் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். உள்ளது’ ராகுல்காந்தி குற்றச்சாட்டு


‘அ.தி.மு.க.வின் முக கவசத்திற்கு பின்னால் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். உள்ளது’ ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 March 2021 1:09 AM GMT (Updated: 29 March 2021 1:09 AM GMT)

அ.தி.மு.க.வின் முக கவசத்திற்கு பின்னால் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். உள்ளது என ராகுல்காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.

சேலம், 

சேலம் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தாக்குதல்

இன்றைக்கு தமிழ் மொழி, பண்பாடு மீதான தாக்குதல் என்று சொல்லும் போது, ஒன்றுபட்ட இந்தியாவின் சிந்தனை மீதான தாக்குதலாகவே கருதுகிறேன். தமிழர்களை மதிக்காத இந்தியா என்பது ஒரு இந்தியாவாக இருக்க முடியாது. ஒற்றை சிந்தனைக்கு தள்ளிவிடும் முயற்சியும் இந்தியாவுக்கே உரிமையானது அல்ல. இப்போது என்னை பொறுத்தவரை எல்லா சித்தாந்தங்களும், மொழிகளும், பண்பாடுகளும், பழக்க வழக்கங்களும் சேர்ந்து தான் இந்தியாவை உருவாக்கி இருக்கிறது.

ஒற்றை சிந்தனை இந்தியாவின் சிந்தனை என்பதை நான் ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். நான் ஒருபுறம் தமிழ் என்ற சிந்தனையை ஆதரிக்கும் போது இன்னொரு புறம் இந்தியாவில் உள்ள அனைத்து சிந்தனைகளையும், பண்பாடுகளையும் மதிக்கிறவனாக இருக்கிறேன்.

பழைய அ.தி.மு.க. கிடையாது

இன்று நாம் எங்கு பார்த்தாலும் முக கவசங்களை பார்க்கிறோம். இந்த முக கவசத்திற்குள் என்ன நிலை, எந்த எண்ணம் ஓடுகிறது என்று புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. நாம் ஒருவரை பார்த்து சிரிக்கும் போது சிரிக்கிறோம் என்று தெரியாத நிலை ஏற்படுகிறது.

அ.தி.மு.க. பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு முதலில் இதனை தெரிந்து கொள்ள வேண்டும். இது பழைய அ.தி.மு.க. என்று யாரும் எண்ணி விடாதீர்கள். இப்போது முக கவசம் அணிந்திருக்கிற ஒரு அ.தி.மு.க. ஆகும். மேலும் அ.தி.மு.க. போல் ஒரு தோற்றத்தில் இருக்கிறது. அந்த முக கவசத்தை கழற்றினால் அது அ.தி.மு.க. அல்ல... ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா கலவையின் ஒரு முகம் தான் உங்களுக்கு தெரியும். பழைய அ.தி.மு.க. என்பது முடிந்துவிட்டது. இப்போது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதாவால் இயக்கப்படும் ஒரு அமைப்பாக இருக்கிறது.

வேளாண் சட்டங்கள்

இந்திய விவசாயிகளை வஞ்சிக்கக்கூடிய 3 வேளாண் சட்டங்களை ஏன் நிறைவேற்றி உள்ளீர்கள்? என்று மத்திய அரசிடம் கேட்கக்கூடிய துணிச்சல் அ.தி.மு.க. அரசுக்கு இல்லை. புதிய கல்வி கொள்கை தமிழகத்தின் கல்வி கொள்கை, தமிழர்களின் வாழ்வியல் முறையை அழிக்கக்கூடிய வகையில் திணிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக முதல்-அமைச்சர் குரல் எழுப்பவில்லை. இவர் எதை பற்றியும் கவலைபடாமல் உள்ளார்.

தமிழகத்தில் மோடியும், அமித்ஷாவும் எதை வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் என்ற அனுமதியை இந்த முதல்-அமைச்சர் வழங்கி உள்ளார். அவர்கள் இந்த நாட்டை பிளவுபடுத்துகிறார்கள். உங்களுடைய மொழி, வரலாறு, பண்பாடு மீது தொடுக்கப்படும் போரை அனுமதிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தேர்தல் தேவையில்லை

இங்கே ஒரு தேர்தலே தேவையில்லை. இந்த மாநிலத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க போகிறார் என்பதை தேர்தலை சந்திக்காமலே என்னால் கூற முடியும். இது தான் உண்மையான நிலை. நீங்கள் எடுத்து கொண்ட முடிவை ஒப்புகொள்ளும் விதமாக தான் வரபோகிற தேர்தல் அமைய இருக்கிறது.

பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.சை முதலில் தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க வேண்டும். பிறகு அவர்களை டெல்லியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story