நந்திகிராம் தொகுதியில் 1,736 வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோல்வி


நந்திகிராம் தொகுதியில் 1,736 வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோல்வி
x
தினத்தந்தி 2 May 2021 3:26 PM GMT (Updated: 2 May 2021 3:26 PM GMT)

நந்திகிராம் தொகுதியில் 1,736 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார்.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிட்டார்.

இதற்கிடையில், நந்திகிராம் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வந்தது. அதில் மம்தா பானர்ஜி - சுவேந்து அதிகாரி இடையே கடுமையான போட்டி நிலவியது. பல கட்ட வாக்கு எண்னிக்கைக்கு பிறகும் தொடர்ந்து இரு வேட்பாளர்களுக்கும் இடையேயான வாக்குவித்தியாசம் மிகக்குறைவான அளவிலேயே இருந்து வந்தது. இதனால் நந்திகிராமில் வெற்றிபெறுவது சுவேந்து அதிகாரியா? மம்தா பானர்ஜியா? என்பதில் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதி இறுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது. அதில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியில் வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மம்தா பானர்ஜியை விட 1,736 வாக்குகள் அதிகம்பெற்றார்.

இதன் மூலம் மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி 1,736 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து மம்தா பானர்ஜி சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நந்திகிராமில் தோல்வியடைந்துள்ள மம்தா பானர்ஜி, நந்திகிராமை பற்றி கவலைப்படவேண்டாம். ஒரு இயக்கத்தை எதிர்த்து நான் போராடியதால் நான் நந்திகிராமில் சிரமப்பட்டுள்ளேன். அது ஒன்றுமில்லை. நந்திகிராம் மக்கள் எந்த தீர்ப்பு வழங்கினாலும் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் 221- க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட்டோம். தேர்தலில் பாஜக தோல்வியடைந்துவிட்டது’ என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story