அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தாய்-மகன் சுட்டுக்கொலை


அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தாய்-மகன் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 2 Feb 2018 10:45 PM GMT (Updated: 2 Feb 2018 7:56 PM GMT)

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தாய்-மகன் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

வாஷிங்டன், 

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் புறநகர் பகுதியான வர்ஜீனியாவில் உள்ள ஒரு தனி வீட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மாலா மன்வானி (வயது 65) என்பவர் தனது மகன் ரிஷி மன்வானி (32) உடன் வசித்து வந்தார்.

ரிஷி மன்வானி அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். கடந்த சில தினங்களாக அவர் பணிக்கு வரவில்லை என தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த சக ஊழியர் ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இது குறித்து விசாரிப்பதற்காக போலீசார் ரிஷி மன்வானியின் வீட்டுக்கு சென்றனர்.

அப்போது ரிஷி மன்வானி அவருடைய தாய் மாலா மன்வானி ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்களின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயங்கள் இருந்தன. இதையடுத்து, போலீசார் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் தனியாக இருந்த தாய்-மகன் இருவரையும் மர்ம நபர்கள் யாரேனும் சுட்டுக் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் டெக்சாஸ் மாகாணம், ஆர்லிங்டனில் இந்திய என்ஜினீயரான வெங்கண்ணகரி கிருஷ்ண சைதன்யா (30) மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story