ஹபீஸ் சயீத் இயக்கத்தின் தலைமை அலுவலகம் வெளியே இருந்த பாதுகாப்பு தடுப்புகளை அகற்றியது பாக்.போலீஸ்

ஹபீஸ் சயீத் இயக்கத்தின் தலைமை அலுவலகம் வெளியே இருந்த பாதுகாப்பு தடுப்புகளை பாகிஸ்தான் போலீசார் அதிரடியாக அகற்றினர். #HafizSaeed
லாகூர்,
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூரில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விஐபிகள் என பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தன்னிச்சையாக தங்கள் இல்லம் மற்றும் அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில், தடுப்புகளை சாலைகளில் குறுக்கே அமைத்து இருந்தனர். பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வரும் மும்பை தாக்குதல் குற்றவாளியான ஹபீஸ் சயீத்தின் இயக்கமான ஜமாத் உத் தவா அமைப்பும் லாகூரில்தான் அமைந்துள்ளது.
ஜமாத் உத் தவா அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள சாலையிலும் மேற்கூறப்பட்டது போல சட்ட விரோத தடுப்புகளை அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் அமைத்து இருந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால், மக்களுக்கு இடையூறு உள்ள போதிலும், அச்சம் காரணமாக யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை. இந்த சூழலில், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து கையில் எடுத்து விசாரித்த லாகூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சகிப் நிசார், “ சட்ட விரோதமாக சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து தடுப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும்” என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். உள்ளூர் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி, உத்தரவை பின்பற்றி அதற்கான அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்ய தவறினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், நவாஸ் ஷெரீப் இல்லம் மற்றும் ஜமாத் உத் தவா தலைமை அலுவலக சாலையில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் என அனைத்தையும் போலீசார் அகற்றினர். பஞ்சாப் மாகாண முதல் மந்திரி இல்லம் அருகே இருந்த தடுப்புகளும் அகற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






