புதிய பாகிஸ்தானை கட்டி எழுப்புவோம்; மக்களுக்கு டுவிட்டர் வழியே இம்ரான் கான் வலியுறுத்தல்


புதிய பாகிஸ்தானை கட்டி எழுப்புவோம்; மக்களுக்கு டுவிட்டர் வழியே இம்ரான் கான் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 July 2018 7:30 AM GMT (Updated: 24 July 2018 7:30 AM GMT)

புதிய பாகிஸ்தானை கட்டி எழுப்புவோம் என பொது மக்களிடம் டுவிட்டர் வழியே இம்ரான் கான் வலியுறுத்தி உள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் நாடாளுமன்றத்துக்கும், 4 மாகாண சட்டசபைகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த தீவிர பிரசாரம் நேற்று நள்ளிரவுடன் ஓய்ந்தது.  நாடாளுமன்ற தேர்தலில் 3,675 பேர், மாகாண சட்டசபை தேர்தல்களில் 8,895 பேர் என மொத்தம் 12,570 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

தேர்தல் பிரசாரத்தின் போது பல்வேறு இடங்களில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களில் 3 வேட்பாளர்கள் உள்பட 180 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்த பொது தேர்தலில் பல்வேறு கட்சிகள் களத்தில் இருந்தாலும், இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (பி.டி.ஐ.) மற்றும் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரீப்) (பி.எம்.எல்-என்.) ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி ஏற்படும் என கூறப்படுகிறது.

இதுபற்றி கடந்த மே மாதத்தில் நடந்த தேர்தல் கருத்து கணிப்பில் பி.டி.ஐ. வெற்றி பெறும் என 30 சதவீதமும், (பி.எம்.எல்-என்.) வெற்றி பெறும் என 27 சதவீதமும் தகவல்கள் வெளியாகின.  ஆனால் ஜூன் மற்றும் ஜூலையில் நடந்த தேர்தல் கருத்து கணிப்பில் (பி.எம்.எல்-என்.) கட்சி வெற்றி பெறும் என அதிக சதவீதத்துடன் முன்னிலை வகித்தது.

இந்த நிலையில், தேர்தல் பற்றி இம்ரான் கான் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய பாகிஸ்தானை கட்டி எழுப்புவோம் என தெரிவித்துள்ளார்.  22 ஆண்டு கால போராட்டத்தின் உச்சம்.  நாட்டிற்காக சிறந்த விசயங்களை செய்துள்ளேன் என உண்மையுடன் என்னால் கூற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத அச்சுறுத்தல்கள் தீவிர நிலையில் இருந்தபொழுதும், வெப்ப காலநிலையிலும் 60 இடங்களில் பேரணி நடத்தி உள்ளேன்.  இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

அவரது நண்பர்களான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வாசிம் அக்ரம் மற்றும் வாகர் யூனிஸ் ஆகியோரும் தேர்தலில் வெற்றி பெற டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இதில் வாசிம் அக்ரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 1992ம் ஆண்டு உங்களுடைய தலைமையில் உலக சாம்பியன் ஆனோம்.  ஒரு பெரிய ஜனநாயக நாடாக உங்களது தலைமையிலேயே நாம் மீண்டும் ஆவோம் என தெரிவித்துள்ளார்.  அதனுடன் அவர் நயா பாகிஸ்தான் (புதிய பாகிஸ்தான்) என்ற ஹேஸ் டேக்கையும் வெளியிட்டுள்ளார்.

Next Story