இங்கிலாந்து: விபத்தில் இந்தியரை கொன்ற போலீஸ் அதிகாரிக்கு சிறை


இங்கிலாந்து: விபத்தில் இந்தியரை கொன்ற போலீஸ் அதிகாரிக்கு சிறை
x
தினத்தந்தி 10 Nov 2018 10:46 PM IST (Updated: 10 Nov 2018 10:46 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து நாட்டில் விபத்தில் இந்தியரை கொன்ற போலீஸ் அதிகாரி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் வசித்து வந்தவர் பல்விந்தர் சிங் (வயது 59). இந்தியர். இவர் அங்கு கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் 2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் வோல்வர்ஹாம்ப்டன் என்ற இடத்தில் அவர் தனது வேனை ஓட்டிச்சென்றார்.

அப்போது அந்த வேன் மீது ஒரு கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் பல்வீந்தர் படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மீது காரை ஓட்டிச்சென்று மோதி விபத்து ஏற்படுத்திய ஜேசன் பேனிஸ்டர் என்பவர் சிக்கினார். அவர் ஸ்டாப்போர்டுஷயர் போலீஸ் அதிகாரி ஆவார்.

அவர் மீது விபத்தை ஏற்படுத்தி பல்விந்தர் சிங்கை கொன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு அங்குள்ள பர்மிங்ஹாம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜேசன் பேனிஸ்டர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவர் குற்றவாளி என நீதிபதி முடிவு செய்து, அவருக்கு 18 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவர் 3 ஆண்டு காலம் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story