ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர் பதவி: இந்தியாவுக்கு 55 ஆசிய, பசிபிக் நாடுகள் ஆதரவு


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர் பதவி: இந்தியாவுக்கு 55 ஆசிய, பசிபிக் நாடுகள் ஆதரவு
x
தினத்தந்தி 26 Jun 2019 11:30 PM GMT (Updated: 26 Jun 2019 11:11 PM GMT)

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், இந்தியாவுக்கு ஆசிய-பசிபிக் குழுமத்தை சேர்ந்த 55 நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

நியூயார்க்,

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பினர் நாடுகள் உள்ளன. அவற்றில் அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவை நிரந்தர உறுப்பினர்கள் ஆகும்.

மீதி 10 நாடுகளும் நிரந்தரம் அல்லாத (தற்காலிக) உறுப்பினர்கள் ஆகும். இவை பிராந்திய அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு 5 உறுப்பினர் பதவிகளும், லத்தீன் அமெரிக்க, கரீபியன் நாடுகளுக்கு 2 உறுப்பினர் பதவிகளும், மேற்கு ஐரோப்பா மற்றும் இதர நாடுகளுக்கு 2 உறுப்பினர் பதவிகளும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு உறுப்பினர் பதவியும் வழங்கப்படுகின்றன. இவை 2 ஆண்டுகளுக்கான பதவியாகும்.

ஒவ்வொரு ஆண்டும் 5 தற்காலிக உறுப்பினர் நாடுகள், ஐ.நா. பொதுச்சபையால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், 2021, 2022 ஆகிய ஆண்டுகளுக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடக்கிறது. இதில், இந்தியா போட்டியிடுகிறது. ஐ.நா.வின் ஆசிய-பசிபிக் குழுமத்தை சேர்ந்த மொத்தம் 55 நாடுகளும் இந்தியாவுக்கு ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளன.

இது, இந்தியாவுக்கு ராஜ்யரீதியாக கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகவலை ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதின் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, 55 நாடுகளுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

ஆசிய-பசிபிக் குழுமத்தில் உள்ள நாடுகளில், சீனா, பாகிஸ்தான், வங்காள தேசம், ஈரான், ஜப்பான், மலேசியா, மியான்மர், சவுதி அரேபியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கவை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினர் பொறுப்பை 1950-1951-ல் இருந்து 2011-2012-ம் ஆண்டுவரை 6 தடவை வகித்துள்ளது.


Next Story