ஆஸ்திரேலியாவில் பரபரப்பு: ஏ.டி.எம். எந்திரத்தில் ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்த மலைப்பாம்பு


ஆஸ்திரேலியாவில் பரபரப்பு: ஏ.டி.எம். எந்திரத்தில் ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்த மலைப்பாம்பு
x
தினத்தந்தி 29 Nov 2019 11:15 PM GMT (Updated: 29 Nov 2019 10:27 PM GMT)

ஆஸ்திரேலியாவில் ஏ.டி.எம். எந்திரத்தில் ஒய்யாரமாக மலைப்பாம்பு ஒன்று படுத்து ஓய்வெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லிஸ்மோர் நகரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. கடந்த புதன்கிழமை இளம்பெண் ஒருவர் பணம் எடுப்பதற்காக இந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார்.

ஏ.டி.எம். மையத்தின் உள்ளே நுழைந்த அவர் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துபோனார். பணம் எடுக்கும் ஏ.டி.எம். எந்திரத்தில் மலைப்பாம்பு ஒன்று ஒய்யாரமாக படுத்து ஓய்வு எடுத்து கொண்டிருந்ததுதான் அவர் அதிர்ச்சியில் உறைய காரணம். உடனடியாக அவர் பணம் எடுக்கும் முடிவை கைவிட்டுவிட்டு, ஓடி சென்று அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் விஷயத்தை கூறினார். இதையடுத்து, பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதற்குள் பாம்பை பார்ப்பதற்காக ஏ.டி.எம். மையம் முன்பு மக்கள் கூட்டம், கூட்டமாக திரண்டனர். அவர்கள் வேடிக்கை பார்த்ததோடு மட்டுமல்லாமல் தங்களது செல்போனில் அந்த மலைப்பாம்பை படம் எடுத்தனர்.

இதனால் எரிச்சலடைந்த பாம்பு அவர்களை நோக்கி சீறியது. ஆனாலும் அதனை பொருட்படுத்தாத மக்கள் மலைப்பாம்பை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் உலாவ விட்டனர். அவை தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதற்கிடையே பாம்பு பிடிப்பவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அந்த மலைப்பாம்பை பிடித்து சென்றனர்.


Next Story