உக்ரைனின் 4 பகுதிகள் ரஷியாவுடன் இணைப்பு - அதிபர் புதின் அறிவிப்பு


உக்ரைனின் 4 பகுதிகள் ரஷியாவுடன் இணைப்பு - அதிபர் புதின் அறிவிப்பு
x

உக்ரைனின் 4 பகுதிகளை ரஷிய பகுதிகளாக அதிபர் புதின் பிரகடனப்படுத்தினார்.

மாஸ்கோ,

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி படையெடுத்தது. 7 மாதங்களாக நடந்து வரும் இந்த போரில் உக்ரைனின் பல பகுதிகள் ரஷியா வசம் வந்துள்ளன.

குறிப்பாக கிழக்கு, மேற்கு உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி வைத்துள்ளன. அந்த வகையில் ரஷிய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன், ஜாபோர்ஜியா ஆகிய 4 உக்ரைன் பிராந்தியங்களை தங்களுடன் இணைத்துக்கொள்ள வழிசெய்யும் வகையில், அந்த பகுதிகளில் ரஷியா பொதுவாக்கெடுப்பு நடத்தியது.

ரஷிய ஆக்கிரமிப்பு பகுதிகளில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் ரஷியாவுக்கு ஆதரவாகத்தான் முடிவுகள் வெளியாகும் என்று மேற்கத்திய நாடுகள் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தன. அதன்படியே இந்த பொதுவாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக ரஷியா அறிவித்தது. உக்ரைனின் 4 பிராந்தியங்களிலும் பெரும்பாலான மக்கள் ரஷியாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைதொடர்ந்து உக்ரைனின் இந்த 4 பிராந்தியங்களையும் ரஷியாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அதிபர் புதின் இன்று வெளியிட்டார். மாஸ்கோவின் கிரெம்லின் மாளிகையில் உள்ள புனித ஜார்ஜ் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உக்ரைனின் 4 பகுதிகளை ரஷிய பகுதிகளாக அதிபர் புதின் பிரகடனப்படுத்தினார்.


Next Story