காங்கோவில் எபோலா வைரஸ் அறிகுறிகளுடன் ஒருவர் உயிரிழப்பு! உலக சுகாதார அமைப்பு ஆய்வு


காங்கோவில் எபோலா வைரஸ் அறிகுறிகளுடன் ஒருவர் உயிரிழப்பு! உலக சுகாதார அமைப்பு ஆய்வு
x

எபோலா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார அமைப்பு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கின்ஷாசா [காங்கோ],

காங்கோ நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள், கிழக்கு மாகாணமான வடக்கு கிவு பகுதியில் எபோலா வைரஸ் பாதிப்பால் ஒரு பெண் உயிரிழந்ததாக கூறப்பட்டதை அடுத்து, சந்தேகத்திற்குரிய அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

காங்கோ தேசிய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐ என் ஆர் பி), நோயாளிக்கு எபோலா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய மாதிரிகளை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சந்தேகத்திற்குரிய 46 வயதுடைய பெண், ஆகஸ்ட் 15, 2022 அன்று வடக்கு கிவுவில் அமைந்துள்ள பெனி என்ற நகரத்தில் இறந்தார்.அவர் ஆரம்பத்தில் பிற இணை நோய்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் பின்னர், எபோலா வைரஸ் நோயுடன் ஒத்த அறிகுறிகள் அவருக்கு வெளிப்பட்டன.

உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்காவிற்கான பிராந்திய இயக்குனர் டாக்டர் மாட்ஷிடிசோ மொய்ட்டி பேசுகையில், "எபோலா வைரஸ் பகுப்பாய்வு நடந்து கொண்டிருக்கும் போது, நாங்கள் ஏற்கனவே காங்கோ சுகாதார அதிகாரிகளுக்கு ஆதரவாக உள்ளோம். எபோலா பரவாமல் கட்டுப்படுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.

சந்தேகத்திற்குரிய அந்த பெண்ணுடன் தொடர்பு கொண்ட எவரையும் அடையாளம் காண சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காங்கோவில் முறையான தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்ய வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.


உள்ளூர் சமூகங்களிடையே எபோலா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக சுகாதார அமைப்பு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எபோலா வைரஸ் நோய்க்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.அதில் அஞ்சுவிமாப் அல்லது எபாங்கா மற்றும் இன்மாசெப் ஆகிய இரண்டு உயிர்காக்கும் மருந்துகள் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெம்டெசிவிர் மற்றும் ஸ்மேப் ஆகிய மருந்துகள் எபோலா சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எபோலா என்பது எபோலா வைரஸால் ஏற்படும் ஒரு கடுமையான மற்றும் ஆபத்தான நோயாகும். எனினும் முறையான சிகிச்சை மூலம் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story