அமெரிக்காவில் வெள்ளப்பெருக்கு; 4 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழப்பு


அமெரிக்காவில் வெள்ளப்பெருக்கு; 4 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழப்பு
x

அமெரிக்காவில் கென்டகி மாகாணத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு 4 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்து உள்ளனர்.


கென்டகி,



அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகள் மற்றும் சாலைகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. கார், பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 25 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணி நடந்து வருகின்றன. இதனால், உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இதுபற்றி கென்டகி கவர்னர் ஆண்டி பெஷீர் கூறும்போது, கென்டகி, டென்னசி மற்றும் மேற்கு விர்ஜீனியா உள்ளிட்ட பகுதிகளின் தேசிய பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சமீப நாட்களில் வான் மற்றும் நீர் வழியே நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

5 கவுண்டி பகுதிகளில் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பெஷீர் கூறியுள்ளார். எனினும், திடீரென மின் வினியோக பாதிப்பு ஏற்பட்டதில் 13 ஆயிரத்திற்கும் கூடுதலான வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

அமெரிக்காவில் பல கவுண்டி பகுதிகளில் வெள்ள நீரில் வீடுகள் அடித்து செல்லப்பட்டு விட்டன. வெள்ள பாதிப்பினால், சிலர் வீட்டின் மேற்கூரையில் தஞ்சம் அடையும் சூழலும் காணப்பட்டது. சில பகுதிகளில் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கே சில ஆண்டுகள் ஆகும் எனவும் பெஷீர் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த வெள்ளப்பெருக்கை ஒரு பேரிடர் என அறிவித்து உள்ளார். கென்டகியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவ வேண்டிய அதிகளவிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.


Next Story