'எங்கள் ஊழியர்கள் சிறை செல்வார்கள் அல்லது.....' - இந்திய சட்டங்கள் குறித்து டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க்


எங்கள் ஊழியர்கள் சிறை செல்வார்கள் அல்லது..... - இந்திய சட்டங்கள் குறித்து டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க்
x

இந்திய சமூகவலைதள சட்டங்கள் குறித்து டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

டுவிட்டர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் டுவிட்டர் ஸ்பேஸ் மூலம் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு இன்று பேட்டியளித்தார்.

அப்போது, இந்திய பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை டுவிட்டர் முடக்கியது குறித்து எலான் மஸ்க் இடம் பிபிசி செய்தியாளர் கேள்வி எழுப்பினார். சமூகவலைதளங்கள் தொடர்பான சட்டங்கள் இந்தியாவில் மிகவும் கடுமையாக உள்ளன. நாட்டின் சட்டங்களை தாண்டி நம்மால் செல்ல முடியாது. சட்டங்களை மதிக்க வேண்டும் அல்லது எங்கள் ஊழியர்கள் சிறைக்கு செல்வார்கள் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தால் நாங்கள் சட்டங்களை மதிப்பை தேர்வு செய்வோம்' என்றார்.

பிபிசி ஆவணப்படம்:-

குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மதக்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்றபோது குஜராத்தின் முதல்-மந்திரியாக நரேந்திரமோடி செயல்பட்டு வந்தார்.

இதனிடையே, நரேந்திரமோடி தற்போது இந்தியாவின் பிரதமராக உள்ள நிலையில் குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிபிசி ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் டெல்லி வன்முறை, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது.

பிபிசி ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாக இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு தடை விதித்தது.

மேலும், இந்தியா: மோடி கேள்விகள் என்ற இந்த பிபிசியின் ஆவணப்படம் இந்தியாவில் சமூகவலைதளங்கள் மூலம் பகிர்வதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவையடுத்து டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் இந்தியா: மோடி கேள்விகள் என்ற இந்த பிபிசியின் ஆவணப்படத்தை தங்கள் வலைதளங்கள் மூலம் பகிரப்படுவதை முடக்கின என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story