ரஷியாவில் புதின் ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்பு; ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி விவாதம்


ரஷியாவில் புதின் ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்பு; ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி விவாதம்
x

ரஷியாவில் புதின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்றார். அதில், ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி விவாதிக்கப்பட்டது.

அஜித் தோவல்

ரஷிய தலைநகர் மாஸ்கோவில், ஆப்கானிஸ்தான் தொடர்பான 5-வது பிராந்திய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், ரஷியா மட்டுமின்றி, இந்தியா, சீனா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார்.

அமெரிக்க படைகள் மீது புதின் தாக்கு

இந்த கூட்டத்தில் ரஷிய அதிபர் புதின் பேசியதாவது:-

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியவுடன் அங்கிருந்து அமெரிக்க படைகள் தப்பி ஓடியது தவறு. அப்போதிருந்து அங்கு நிலைமை முன்னேறவில்லை. அல்கொய்தா உள்பட சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் தங்கள் நடவடிக்கைகளை அங்கு முடுக்கி விட்டுள்ளன.

40 லட்சம் மக்கள், அவசரமான மனிதாபிமான உதவியை எதிர்பார்த்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் கிடைக்கும் அபினில் 80 சதவீதம், ஆப்கானிஸ்தானில் இருந்து செல்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ள சில நாடுகள் முயற்சிக்கலாம். இவற்றுக்கெல்லாம் நாம் தீர்வு காண ேவண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆலோசனை

ஆப்கானிஸ்தான் நிலவரத்துக்கு தீர்வு காண்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பயங்கரவாதத்தை எதிர்ப்பது, போதைப்பொருள் கடத்தல் போன்றவை தொடர்பாக தலீபான்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் இத்தகைய கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.


Next Story