பாகிஸ்தான் வெள்ளம்: நிவாரண உதவியாக ரூ.459.56 கோடி ஒதுக்கிய அமெரிக்கா


பாகிஸ்தான் வெள்ளம்:  நிவாரண உதவியாக ரூ.459.56 கோடி ஒதுக்கிய அமெரிக்கா
x

பாகிஸ்தானின் வெள்ள நிவாரண மற்றும் மனிதநேய அடிப்படையிலான உதவிக்கு ரூ.459.56 கோடியை அமெரிக்கா ஒதுக்கி உள்ளது.



வாஷிங்டன்,


பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்புகளால் அந்நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், சாலைகளும், பாலங்களும் முறையே துண்டிக்கப்பட்டும், நீரில் அடித்து செல்லப்பட்டும் உள்ளன. நாட்டில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். 5 லட்சத்திற்கும் கூடுதலானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

வெள்ளத்திற்கு பின்பு, லட்சக்கணக்கானோர் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், 1.34 லட்சம் பேர் வயிற்று போக்காலும், 44 ஆயிரம் பேர் மலேரியா வியாதியாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ளம் பாதித்தோரில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தோல் வியாதியாலும், 101 பேர் பாம்பு கடியாலும் மற்றும் 500 பேர் நாய் கடியாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியமைப்பு வெளியிட்ட செய்தியில், 6.5 லட்சம் கர்ப்பிணிகள் உள்ள அந்நாட்டில், 73 ஆயிரம் பேர் இந்த மாதத்தில் பிரசவிக்க கூடும் என தெரிவித்து இருந்தது. இதனால், தாய்மைகால சுகாதார சேவைகள் தேவைப்படுபவர்களாக அவர்கள் இருப்பார்கள் என்றும் தெரிவித்தது.

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புக்கு 1,500 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 500-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் ஆவர். 12 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் வெள்ள பாதிப்பில் காயமடைந்து உள்ளனர்.

இந்த நெருக்கடியான சூழலில் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் எதிர்பார்த்து உள்ளது. இந்த சூழலில், பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி, அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கனை வாஷிங்டன் நகரில் நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர், பாகிஸ்தானின் வெள்ள நிவாரண மற்றும் மனிதநேய அடிப்படையிலான இந்த ஆண்டிற்கான நிதி உதவியாக ரூ.459.56 கோடி அமெரிக்கா ஒதுக்கி உள்ளது. இதுதவிர, ரூ.81.34 கோடி உணவு பாதுகாப்பு உதவி தொகையாகவும் பாகிஸ்தானுக்கு இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.


Next Story