பாகிஸ்தான்: முன்னாள் உள்துறை மந்திரி கைது; தனது உயிருக்கு ஆபத்து என அச்சம்


பாகிஸ்தான்: முன்னாள் உள்துறை மந்திரி கைது; தனது உயிருக்கு ஆபத்து என அச்சம்
x

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தீவிர ஆதரவாளரான முன்னாள் உள்துறை மந்திரி ஷேக் ரசீது அகமது போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.



கராச்சி,


பாகிஸ்தானில் அவாமி முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக இருப்பவர் ஷேக் ரசீது அகமது. 16 முறை மந்திரியாக பதவி வகித்துள்ள அகமது, முர்ரீ மோட்டார்வே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து அவரை மருத்துவ பரிசோதனைக்காக இஸ்லாமாபாத் நகரில் உள்ள பாலிகிளினிக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, ரசீது கூறும்போது, இம்ரான் கானுக்கு துணையாக நின்றேன் என்பது என்னுடைய குற்றம். 16 முறை மந்திரியாக இருந்துள்ளேன்.

ஆனால், ஒரு முறை கூட என் மீது அமைச்சகத்தில், ஊழல் செய்த குற்றச்சாட்டு என்பது கிடையாது என கூறியுள்ளார். அவர் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது என அச்சம் தெரிவித்து உள்ளார்.

போலீசார் தன்னையும், மருமகன் ஷேக் ரசீது ஷபீக் என்பவரையும் ராவல்பிண்டியில் வைத்து கைது செய்தனர் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, 100 முதல் 200 ஆயுதமேந்திய நபர்கள் ஏணிகளை போட்டு இல்லத்திற்குள் புகுந்தனர். அவர்கள் கதவுகளையும், ஜன்னல்களையும் அடித்து நொறுக்கினர். என்னுடைய வேலைக்காரர்களையும் அடித்து, தாக்கினர்.

அதன்பின் போலீசார் கட்டாயப்படுத்தி தன்னை அவர்களது வாகனத்தில் வைத்து கொண்டு சென்றனர் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவாக ரசீது சமீபத்தில் பேசும்போது, முன்னாள் அதிபரான ஆசிப் அல் சர்தாரி, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டினார் என குற்றச்சாட்டாக கூறினார்.

இதற்கு எதிராக ரசீது மீது சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ராவல்பிண்டி பிரிவு தலைவர் ராஜா இனாயத் உர் ரகுமான் போலீசிடம் புகார் அளித்து உள்ளார். அதில், சர்தாரி மீது குற்றச்சாட்டு கூறி அவருக்கு ரசீது, நிரந்தர ஆபத்து ஏற்படுத்தி விட்டார் என தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story