ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி; எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை


ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி; எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை
x

ஆற்றல் பயன்பாட்டை குறைக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கு அறிவுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாரிஸ்,

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததை கண்டித்து இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள், ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. ரஷியாவிற்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தடைகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் ரஷியாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆண்டு கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் எரிசக்தி தேவைக்கு ரஷியாவின் இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவு செய்துள்ளன. அதன்படி ஆற்றல் பயன்பாட்டை குறைக்கவும், இயற்கை எரியாற்றல் உற்பத்தியை அதிகப்படுத்தவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கு அறிவுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதே சமயம் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியை தொடர்ந்து, எதிர்வரும் குளிர்காலத்தில் இங்கிலாந்திலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அந்நாட்டின் தேசிய மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மின்சார பயன்பாட்டை குறைக்கும் வகையில் 3 மணி நேர மின்வெட்டு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் எரிசக்தி ஒழுங்குமுறை அமைப்பான பெடரல் நெட்வொர்க் ஏஜென்சி, வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு மின் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளது. குளிர்காலத்தில் எரிவாயு நெருக்கடியை சமாளிக்கும் வகையில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் குறைந்தபட்சம் 20% எரிவாயு பயன்பாட்டை குறைக்க வேண்டும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இதே போல் பிரான்ஸ், பின்லாந்து ஆகிய நாடுகளிலும் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story