'பணக்காரர்களுக்கு அதிக வரி விதித்து, ஏழைகளை பாதுகாக்க வேண்டும்' - பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தல்


பணக்காரர்களுக்கு அதிக வரி விதித்து, ஏழைகளை பாதுகாக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தல்
x

Image Courtesy : @KGeorgieva

பாகிஸ்தானின் பொருளாதாரம் நிலைப்பெற வலிமையான கொள்கைகள் அவசியம் என்று கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.

நியூயார்க்,

பாகிஸ்தானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கடன் உதவி வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்று பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் 3 பில்லியன் டாலர் நிதி ஒதுக்க அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வாரூல் ஹக் காகர், அங்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவாவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தானில் உள்ள வசதி படைத்தவர்களிடம் இருந்து அதிக வரி வசூலிக்கவும், ஏழை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் கிறிஸ்டாலினா வலியுறுத்தினார். மேலும் பாகிஸ்தானின் பொருளாதாரம் நிலைப்பெற வலிமையான கொள்கைகள் அவசியம் என்றும், அதன் மூலம்தான் நிலைத்தன்மையையும் ஒருங்கிணைந்த வளர்ச்சியையும் எட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story