கோத்தபய ராஜபக்சே எங்களிடம் அடைக்கலம் கோரவில்லை - தாய்லாந்து தகவல்


கோத்தபய ராஜபக்சே எங்களிடம் அடைக்கலம் கோரவில்லை - தாய்லாந்து தகவல்
x

தங்கள் நாட்டில் தஞ்சம் அடைய கோத்தபய ராஜபக்சே அடைக்கலம் கோரவில்லை என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

பாங்காங்,

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர்.

இந்த சூழலில், ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஜூலை 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபய தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு கடந்த ஜூலை 13ந்தேதி ராணுவ விமானத்தில் தப்பி சென்றார்.

அதன்பின் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றார். கோத்தபய ராஜபக்சேவின் விசா காலம் வருகிற 11ந்தேதி நாளையுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, அவர் சிங்கப்பூரை விட்டு புறப்பட வேண்டும். கோத்தபய ராஜபக்சேவை சிங்கப்பூரிலேயே சிறிது காலம் தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என இலங்கை அரசு அனுமதி கோரி உள்ளது.

இந்த சூழலில், இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து நாளை தாய்லாந்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்காலிகமாக தாய்லாந்தில் தஞ்சமடைய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தங்கள் நாட்டில் தஞ்சம் அடைய கோத்தபய ராஜபக்சே அடைக்கலம் கோரவில்லை என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. தாய்லாந்து வருவதற்கு கோத்தபய ராஜபக்சே கோரிக்கை விடுத்து இருப்பதாகவும், அவர் 90 நாட்கள் எங்கள் நாட்டில் தங்குவதற்கு தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story