பிப்ரவரி 1-ந்தேதி லண்டனில் 1 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தம்


பிப்ரவரி 1-ந்தேதி லண்டனில் 1 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x

கோப்புப்படம்

லண்டனில், பிப்ரவரி 1-ந்தேதி 1 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில், அங்குள்ள மிகப்பெரிய வர்த்தக அமைப்புகளில் ஒன்றான பொது மற்றும் வர்த்தக சேவை அமைப்பு வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அமைப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் பிற துறையை சார்ந்த ஊழியர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

'1 லட்சம் ஊழியர்கள் பிப்ரவரி 1-ந்தேதி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்' என்று அந்த அமைப்பின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டு உள்ளது. முந்தைய பிரதமர் லிஸ்டிரஸ் காலத்தில் பொருளாதார நெருக்கடி மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளால் அடிக்கடி போராட்டங்கள் நடந்தது. அதனால் லிஸ் டிரஸ் பதவி விலகி, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் பிரதமராக பொறுப்பேற்றார். அவர் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக வரி உயர்வு உள்ளிட்ட சில கடுமையான நடவடிக்கைகளை சமீபத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் வேலை பாதுகாப்பு, வேலைநீக்க விதிமுறைகள், ஓய்வூதியம், சம்பளவிகிதம் உள்ளிட்டவற்றில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் திரளும் மிகப்பெரிய மக்கள் போராட்டம் இதுவாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story