கந்த சஷ்டி நிறைவு விழாவையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


கந்த சஷ்டி நிறைவு விழாவையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
x

கந்தசஷ்டி விழாவின் இறுதி நாள் மற்றும் முகூர்த்த தினம் என்பதால் முருகப் பெருமானை தரிசிக்க அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் மலைக் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு விஷேச நாட்களில் வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில மக்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி தொடங்கி 6 நாட்களாக கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைப்பெற்று வந்தது. இதையொட்டி, தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டும், உற்சவர் சண்முகருக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இதையடுத்து நேற்றுமுன்தினம் மாலை புஷ்பாஞ்சலி நடைபெற்றது. விழாவில் இறுதி நாளான நேற்று காலை 10 மணிக்கு காவடி மண்டபத்தில் கல்யாண உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு மேள தாளங்கள் முழங்க சீர்வரிசை வைபோக நிகழ்வு நடைபெற்றது. அப்போது திரளாக கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து சாமி தரிசனத்திற்கு வந்த பெண்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மஞ்சள், குங்குமம், தாலி வழங்கப்பட்டது.

கந்தசஷ்டி விழாவின் இறுதி நாள் மற்றும் முகூர்த்த தினம் என்பதால் நேற்று முருகப் பெருமானை தரிசிக்க அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் மலைக் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.


Next Story