ஆச்சரியம் மிகுந்த அண்ணாமலையார் கோபுரங்கள்


ஆச்சரியம் மிகுந்த அண்ணாமலையார் கோபுரங்கள்
x

ஆன்மிக ரீதியாக பழமையானதும், புகழ்பெற்றதும், பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்குவதும், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவில் ஆகும். இந்த ஆலயம் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.

இந்த ஆலய கட்டுமானத்தில் சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், ஹொய்சாலர்கள், விஜய நகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள், நகரத்தார், குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள், ஏழை பெண் சித்தர் என பல்வேறு தரப்பினரின் பங்களிப்பு இருக்கிறது.

25 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்த இந்த ஆலயத்தில், 9 கோபுரங்கள், 6 பிரகாரங்கள், 142 சன்னிதிகள், 22 விநாயகர்கள், 43 செப்புச் சிலைகள் போன்றவை இடம்பெற் றுள்ளன.

திருவண்ணாமலைக்கு 'நவதுவார பதி' என்ற பெயரும் உண்டு. இதற்கு 'ஒன்பது நுழைவுவாசல் களைக் கொண்ட நகரம்' என்று பொருள். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒன்பது கோபுரங்கள் அமைந்திருக்கின்றன. ஆலயத்திற்கு அழகூட்டும் இவற்றில் 4 ராஜகோபுரங்களும், கட்டை கோபுரங்கள் எனப்படும் 5 சிறிய கோபுரங்களும் அடங்கும். இந்த கோபுரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ராஜகோபுரம்

அண்ணாமலையார் ஆலயத்தின் பிரதான கோபுரம் இது. கிழக்கு திசையில் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த கோபுரத்திற்கு 'ராயர் கோபுரம்' என்ற பெயரும் உண்டு. தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன், அங்கு பிரம்மாண்டமான பெரிய கோவிலையும், 216 அடி உயரம் கொண்ட கருவறை கோபுரத்தையும் அமைத்தார். அவருக்குப் பிறகு 15-ம் நூற்றாண்டில் தென்னகத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர், தனது வெற்றிகளின் நினைவாக திருவண்ணாமலையில் ராஜராஜன் அமைத்த கோபுரத்தை விட அதிக உயரம் கொண்ட கோபுரம் கட்டுவதற்கு முடிவு செய்தார்.

இதற்கான பணியை 1550-ம் ஆண்டு தொடங்கினார். 135 அடி நீளம், 98 அடி அகலத்தில் கிழக்கு ராஜகோபுரத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. ஆனால் கோபுரம் கட்டும் பணிக்கு முன்பாகவே அவர் இறந்துவிட்டார். பாதியில் நின்ற அந்தப் பணி குறித்து, தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற செவ்வப்ப நாயக்கர், திருவண்ணாமலை கிழக்கு ராஜகோபுரத்தைக் கட்டி முடித்தார். கிருஷ்ணதேவராயர் ஆசைப்படியே தஞ்சை பெரிய கோவில் கருவறை கோபுரத்தை விட, ஒரு அடி அதிகமாக 217 அடி உயரத்தில், 11 நிலைகளுடன் இந்த ராஜகோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அமைந்த மிக உயரமான கோபுரங்களில் 2-வது இடம், திருவண்ணாமலை கிழக்கு ராஜகோபுரத்திற்குத்தான்.

அம்மணி அம்மாள் கோபுரம்

வடக்கு ராஜகோபுரத்திற்கு இந்தப் பெயர். திருவண்ணா மலை அருகே உள்ள சென்னசமுத்திரத்தைச் சேர்ந்தவர் அம்மணி அம்மாள். சிறுவயதில் ஒரு முறை திருவண்ணாமலை அண்ணாமலையாைர தரிசிக்க வந்தபோது, திருவண்ணாமலையிலேயே தங்கிவிட்டார். பருவம் வந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்ந்தார்.

அம்மணி அம்மாளுக்கு பாதியில் கட்டப்பட்ட நிலையில் இருந்த வடக்கு கோபுரத்தைக் கண்டு மன வருத்தம் உண்டானது. அந்த கோபுரத்தை முழுமையாக கட்டி முடிக்க நினைத்தார். இதற்காக செல்வந்தர்கள் பலரிடம் சென்று நன்கொடை பெற்று பொருளீட்டினார். ஒரு முறை ஒரு செல்வந்தரை சந்தித்து பணம் கேட்டார். தன்னிடம் பணம் இல்லை என்று அந்த செல்வந்தர் கூறினார். ஆனால் அம்மணி அம்மாள் தன்னுடைய இறையருளால், அந்த செல்வந்தரிடம் இருந்த பணத்தின் அளவை துல்லியமாக கூறி, அந்த பணத்தை மட்டும் நன்கொடையாக அளிக்கும்படி கேட்டார். அந்த பெண் சித்தரின் சக்தியை அறிந்த செல்வந்தர், அந்த தொகையை அப்படியே கொடுத்துவிட்டார். பணம் இல்லாத சமயத்தில், ராஜகோபுரம் கட்டும் பணியாளர்களுக்கு, திருநீறு அடங்கிய முடிச்சை ஊதியமாக வழங்கினார். தொழிலாளர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அந்த முடிச்சில் அவர்களுக்கான சரியான ஊதியம் இருந்திருக்கிறது. இப்படி பெண் சித்தரால் கட்டப்பட்ட இந்த ஆலயம், 171 அடி உயரம் கொண்டது. 17-ம் நூற்றாண்டில் இறந்த அம்மணி அம்மாளின் ஜீவ சமாதி, ஈசானிய லிங்கத்தின் எதிரில் இருக்கிறது.

திருமஞ்சன கோபுரம்

அண்ணாமலையார் கோவிலின் தெற்கு திசையில் அமைந்துள்ள கோபுரம் இது. பழங்காலம் தொட்டே சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வதற்கான புனித நீரை, யானை மீது வைத்து இந்த வாசல் வழியாகத்தான் எடுத்து வருவது வழக்கம். எனவேதான் இதற்கு 'திருமஞ்சன கோபுரம்' என்று பெயர். 157 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது, யாரால் கட்டப்பட்டது என்ற விவரங்கள் தெரியவில்லை.

கிழக்கு ராஜகோபுரத்திற்கு அடுத்ததாக பல சிறப்புகளைக் கொண்டதாக இந்த தெற்கு ராஜ கோபுரம் விளங்குகிறது. ஆனி மாதம் நடைபெறும் 'ஆனி திருமஞ்சனம்', மார்கழி மாதம் நடைபெறும் 'ஆருத்ரா தரிசனம்' ஆகிய இரண்டு விழாக்களின் போதும், இந்த ராஜகோபுரம் வழியாகத்தான் நடராஜரை வீதி உலாவிற்கு எடுத்துச் செல்வாா்கள். அதுபோல வீதி உலா முடிந்த பிறகும், இந்த கோபுரம் வழி யாகத்தான் நடராஜர் உள்ளே அழைத்து வரப்படுவார்.

பேய்க்கோபுரம்

கிழக்கு ராஜகோபுரத்திற்கு நோ் பின்பகுதியில் மேற்கு திசையில் கட்டப்பட்ட கோபுரம் இது. இந்த கோபுரம், மலையைப் பார்த்தபடி இருப்பதால் இதற்கு தனிச்சிறப்பு உண்டு. 160 அடி உயரம் கொண்ட இந்த ராஜகோபுரம் அமைக்கும் பணியை தொடங்கியதும், கிருஷ்ணதேவராயர் தான். கிழக்கு ராஜகோபுரப் பணியின் போதே, இதற்கான பணியும் தொடங்கப்பட்டது. இந்த கோபுரத்தின் பணிகளையும் முழுமையாக முடித்தது செவ்வப்ப நாயக்கர்தான்.

'பேய்க்கோபுரம்' என்று அழைக்கப்பட்டாலும், பேய்க்கும் இந்த கோபுரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேற்கு கோபுரம் என்பது பேச்சு வழக்கில் 'மேக் கோபுரம்' என்று வழங்கப்பட்டது. பிறகு அது 'பேக்கோபுரம்' என்று மக்களால் பேசப்பட்டது. இந்த பேக்கோபுரம் என்ற சொல்லே திரிந்து 'பேய்க்கோபுரம்' என்று ஆகிவிட்டது. 9 நிலைகொண்ட இந்த ராஜகோபுரத்தில் மகிஷாசுரனை துர்க்கை வதம் செய்யும் காட்சி, காளை வாகனத்தில் அமர்ந்த சிவன் உள்ளிட்ட பல்வேறு தெய்வ சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

கட்டை கோபுரங்கள்

திருவண்ணாமலையில் நான்கு வீதிகளிலும் அமைந்த ராஜகோபுரங்களுக்கு அடுத்ததாக உள்ளே அமைந்திருக்கும் 5 சிறிய கோபுரங்களும் கூட மிகவும் சிறப்புக்குரியவைதான். அந்த கோபுரங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

வல்லாள மகாராஜ கோபுரம்

கிழக்கு ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்ததும் இருப்பது, இந்த கோபுரம். 1318-ம் ஆண்டு தொடங்கி 1340-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோபுரத்தை வீர வல்லாள மகாராஜா கட்டினார். இதனால் இந்த கோபுரத்திற்கு 'வீர வல்லாள திருவாசல்' என்றும் பெயர். இந்த கோபுரத்தின் கீழ் பகுதி தூண் ஒன்றில் வல்லாள மகாராஜாவின் சிற்பம் கைகூப்பிய நிலையில் இருக்கும். சிவன், பார்வதி, விநாயகர், கல்லால மரத்தின் கீழ் அமைந்திருக்கும் தட்சிணாமூர்த்தி, சமணரை கழுவேற்றும் சிற்பங்கள் உள்ளன. இந்த மகாராஜாவுக்கு பிள்ளை இல்லாததால், சிவபெருமானே, மகனாக இருந்து வல்லாள மகாராஜாவின் இறுதிச்சடங்குகளை செய்ததாக சொல்லப்படுகிறது.

கிளி கோபுரம்

வல்லாள மகாராஜா கோபுரத்தைத் தாண்டியதும் இருக்கும் கோபுரம் இது. 81 அடி உயரம், 5 நிலைகளுடன் அமைந்த இந்த கோபுரத்தை 1053-ம் ஆண்டு ராஜேந்திர சோழன் கட்டியுள்ளாா். திருவண்ணாமலை ஆலயத்தில் உள்ள கோபுரங்களில் இது மிகவும் பழமையானது. தன்னுடைய கீழான நிலையை எண்ணி தற்கொலை செய்ய நினைத்து, இந்த கோபுரத்தில் இருந்து குதித்த அருணகிரிநாதரை, முருகப்பெருமான் காப்பாற்றி, தன்னுடைய திருப்புகழைப் பாடும்படி பணித்தார். இந்த கோபுரத்தின் உச்சியில் கிளி சிற்பம் அமைந்துள்ளது.

ஒரு முறை மன்னனின் உயிரைக் காக்கும் பொருட்டு, தேவலோக மலரை பறித்து வர ேவண்டிய சூழல் அருணகிரிநாதருக்கு ஏற்பட்டது. அவா் தன்னுடைய உயிரை, கூடுவிட்டு கூடு பாயும் வித்தை மூலமாக கிளிக்குள் ெசலுத்தி, தேவலோகம் சென்றார். அவரது உடல் கோபுரத்தின் உச்சியில் இருந்தது. இதை அறிந்த அருண கிரிநாதரின் போட்டியாளர் சம்பந்தாண்டான், அருணகிரிநாதரின் உடலை எரித்து விட்டான். இதனால் அருணகிரிநாதர், கிளி உருவிலேயே இருக்க வேண்டியதாயிற்று. அவர் கிளி உருவத்தில் இந்த கோபுரத்தில் இருந்து நிறைய பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் கந்தர் அனுபூதி, சுந்தர அந்தாதி போன்ற இலக்கியங்கள் குறிப்பிடத்தக்கது. இதனால்தான் இந்த கோபுரத்திற்கு 'கிளி கோபுரம்' என்று பெயா்.

தெற்கு கட்டை கோபுரம்

திருமஞ்சன கோபுரத்திற்குள் நுழைந்ததும் உள்ளே அமைந்த 5 நிலைகளுடன் கூடிய சிறிய கோபுரம் இது. 70 அடி உயரம் கொண்டது. இக்கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் பல்வேறு சிற்பங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

மேற்கு கட்டை கோபுரம்

பேய்க்கோபுரத்தின் வாயிலாக ஆலயத்திற்குள் நுழையும் போது வரும் சிறிய கோபுரம் இது. இதுவும் 5 நிலைகளுடன் 70 அடி உயரத்தில் அமைந்த ஆலயம்தான். இந்த கோபுரத்தில் அஷ்டதிக்கு காவல் தெய்வங்களின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

வடக்கு கட்டை கோபுரம்

அம்மணி அம்மாள் கோபுரத்தை அடுத்து ஆலயத்திற்குள் அமைந்த சிறிய கோபுரம் இது. 45 அடி உயரத்தில் அமைந்த இந்த கோபுரத்தில், சிவன், பார்வதி, விநாயகர், முருகன், துவார பாலகர்கள் மற்றும் நடன பெண்மணிகளின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.


Next Story