தீபத் திருவிழாவிற்கு தயாராகும் திருவண்ணாமலை: பக்தர்கள் ஆன்லைன் மூலம் நெய் காணிக்கை செலுத்தலாம்


தீபத் திருவிழாவிற்கு தயாராகும் திருவண்ணாமலை: பக்தர்கள் ஆன்லைன் மூலம் நெய் காணிக்கை செலுத்தலாம்
x

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 26-ந் தேதி அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 14-ந் தேதி துர்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. 17-ந் தேதி அதிகாலையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது. சிகர நிகழ்ச்சியாக 26-ந் தேதி அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

மகா தீபம் ஏற்றுவதற்கு 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம். இதற்காக பக்தர்களிடம் இருந்து காணிக்கை வசூலிக்கப்படுகிறது. மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. பணம் செலுத்தும் பக்தர்களுக்கு அதற்கான ரசீது உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

இதில் ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ நெய் ரூ.150, கால் கிலோ நெய் ரூ.80 என்ற அடிப்படையில் காணிக்கை வசூலிக்கப்படுகிறது. மேலும் கோவிலுக்கு வந்து நெய் காணிக்கை செலுத்த முடியாத பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் இணைய வழியில் நெய் காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் பக்தர்கள் நெய் காணிக்கைக்கான கட்டணம் செலுத்தலாம். இந்த தகவல் கோவில் நிா்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story