விராட் கோலி விலகியது ஏன்? பி.சி.சி.ஐ விளக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விராட் கோலி விலகியுள்ளார்.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் ஆளுக்கு ஒன்று வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தனிப்பட்ட காரணங்களுக்காக முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எஞ்சிய போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்.

இந்த விஷயம் தற்போது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் இப்படி விராட் கோலி இந்த தொடரில் இருந்து முற்றிலுமாக விலக என்ன காரணம்? என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த விஷயத்திற்கான தெளிவான விளக்கத்தை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அவர்கள் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டதாவது :

'விராட் கோலியின் பிரைவசியை நாங்கள் மதிக்கிறோம். அவர் எங்களிடம் முறைப்படி அவரது தனிப்பட்ட முடிவை தெரிவித்து விட்டே இந்த விடுப்பினை எடுத்துள்ளார். எனவே மீண்டும் ஒருமுறை நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்வது ஒரே ஒரு விஷயம்தான். விராட் கோலி விலகல் குறித்து எந்த ஒரு வதந்தியையோ, யூகங்களையோ பரப்ப வேண்டாம். அவரது முடிவிற்கு மதிப்பு கொடுக்க வேண்டியது முக்கியம். எனவே அவரது விஷயத்தில் யாரும் எந்த தவறான தகவலையும் பரப்ப வேண்டாம்' என பி.சி.சி.ஐ கேட்டுக் கொண்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com