'என்னுடைய கனவில் கோலி வருகிறார்'- வாசிம் அக்ரம்


என்னுடைய கனவில் கோலி வருகிறார்- வாசிம் அக்ரம்
x
தினத்தந்தி 11 Sep 2023 6:04 AM GMT (Updated: 11 Sep 2023 6:05 AM GMT)

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சூப்பர்4 சுற்று ஆட்டம் மழையால் பாதியில் நின்றது.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதனால் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் தொடர்ந்து 2-வது முறையாக 100 ரன்களை தாண்டியது.

இருவரும் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். முதலில் ரோகித் 56 ரன்களிலும், சிறிது நேரத்திலேயே கில் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில் இந்திய அணி 24.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின் கள நடுவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்தபோதும் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் போட்டி நேற்று ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர்4 சுற்று ஆட்டம் இன்று (ரிசர்வ் டே) நடைபெற உள்ளது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் உள்ளனர். இன்று மாலை 3 மணிக்கு ஆட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் நேற்று டி.வி. நிகழ்ச்சியில் பேசும் போது, 'ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக விராட்கோலியை கடந்து சென்ற போது நான் அவரிடம், 'இப்போதெல்லாம் என்னுடைய கனவில் நீங்கள் வருகிறீர்கள்' என்று சொன்னேன். அதற்கு கோலி, 'என்ன சொல்கிறீர்கள்' என்று கேட்டார். உங்களை டி.வியில் அதிகமாக பார்ப்பதால் நீங்கள் கனவில் வந்திருக்கலாம் என்று அப்போது சொன்னேன். கோலியை அடிக்கடி டி.வியில் பார்ப்பதால் அவரை எனது மனதில் இருந்து அகற்ற முடியவில்லை' என்றார்.


Next Story