பயிற்சி ஆட்டம் நடைபெற்ற கான்பெரா பிட்ச் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் இயக்குனர்..!


பயிற்சி ஆட்டம் நடைபெற்ற கான்பெரா பிட்ச் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் இயக்குனர்..!
x

image courtesy; AFP 

தினத்தந்தி 12 Dec 2023 6:58 AM GMT (Updated: 12 Dec 2023 7:21 AM GMT)

ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி விளையாடியது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 14ஆம் தேதி தொடங்க உள்ளது.

அதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி விளையாடியது.

கான்பெரா நகரில் கடந்த 6ஆம் தேதி முதல் - 9ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 391/9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதன் பின் விளையாடிய ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணி 367/4 ரன்கள் எடுத்திருந்தபோது 4 நாட்கள் முடிந்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்நிலையில் பயிற்சி ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸில் கூட 10 விக்கெட்டுகளை எடுக்க முடியாத அளவுக்கு கான்பெரா பிட்ச் மிகவும் மெதுவாக இருந்ததாக பாகிஸ்தான் அணியின் இயக்குனர் முகமது ஹபீஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது பின்வருமாறு;- " கான்பெரா பிட்ச் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு அணி விளையாடியதிலேயே மிகவும் மெதுவான பிட்ச். நாங்கள் விரும்பும் பிட்ச் இங்கே கிடைக்காது என்பதை அறிவோம். எனவே அதை மீண்டும் மீண்டும் பேசி ஆஸ்திரேலிய வாரியத்திற்கு எதிராக பிரச்சினையை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால் இது போன்ற ஏற்பாடுகளை நாங்கள் எதிர்பார்க்காததால் பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளோம். இது அவர்களின் திட்டமாக இருக்கலாம். நாங்கள் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இதேபோல அடுத்து வரும் சவால்களையும் நாங்கள் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்" என்று கூறினார்.


Next Story