டி20 உலகக் கோப்பை: "பாகிஸ்தான் இந்த வாரம் என்றால் இந்திய அணி அடுத்த வாரம் வெளியேறும்"- அக்தர் கணிப்பு


டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் இந்த வாரம் என்றால் இந்திய அணி அடுத்த வாரம் வெளியேறும்- அக்தர் கணிப்பு
x

Image Courtesy: AFP 

இந்திய அணி அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து நாடு திரும்பும் என அக்தர் தெரிவித்துள்ளார்.

கராச்சி,

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை கத்துக்குட்டியாக கருதப்படும் ஜிம்பாப்வே 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தது.

முன்னதாக இந்தியாவுக்கு எதிராக கடைசி பந்து வரை அனல் பறந்த போட்டியில் வீழ்ந்த பாகிஸ்தான் அதிலிருந்து மீள முடியாமல் ஜிம்பாப்வேவுக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர், உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து நாடு திரும்பும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் ஆட்டம் உண்மையிலேயே ஏமாற்றம் அளிக்கிறது. இந்த உலகக் கோப்பையிலிருந்து பாகிஸ்தான் இந்த வாரம் வெளியே வந்துவிடும் என்று ஏற்கனவே நான் கூறியுள்ளேன். அதே சமயம் அடுத்த வாரம் அரை இறுதியில் விளையாடிய பின் இந்தியாவும் தோல்வி அடைந்து நாடு திரும்பும். ஏனெனில் இந்தியா ஒன்றும் தோற்கடிக்க முடியாத அணி கிடையாது" என்றார். அக்தரின் இந்த பேச்சை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இந்திய ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.


Next Story