போதையில் தகாதமுறையில் நடந்தார்...! கிரிக்கெட் வீரர் மீது நடிகை 10 பிரிவுகளில் புகார்


போதையில் தகாதமுறையில் நடந்தார்...! கிரிக்கெட் வீரர் மீது நடிகை 10 பிரிவுகளில் புகார்
x

போதையில் தகாதமுறையில் நடந்து கொண்டார் என கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது நடிகை ஸ்வப்னா கில் புகார் அளித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. இவர் கடந்த வாரம் புதன்கிழமை இரவு மும்பையில் உள்ள சாண்டகிரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வெளியே வந்தார். அப்போது, அங்கு வந்த இன்ஸ்டாகிராம் பிரபலமும், போஜ்புரி நடிகையுமான ஸ்வப்னா கில் ஒரு செல்பி புகைப்படம் எடுக்க வேண்டுமென பிரித்வி ஷாவிடம் கேட்டுள்ளார். அதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்வப்னா கில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரித்விஷாவை கடுமையாக தாக்கினார். மேலும், பிரித்வி ஷாவின் காரையும் அந்த கும்பல் அடித்து உடைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக பிரித்வி ஷா அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்வப்னா கில் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் பிரித்வி ஷா மீது தாக்குதல் நடத்திய ஸ்வப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்வப்னா கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அனைவரும் மும்பை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, ஸ்வப்னா கில் மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஸ்வப்னா கில் மற்றும் அவரது கூட்டளிகள் மேலும் 3 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி ஸ்வப்னா அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த ஜாமின் மனுவை விசாரித்த அந்தேரி கோர்ட்டு ஸ்வப்னாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

தற்போது ஸ்வப்னா கில் சமீபத்தில் ஜாமினில் வெளீயே வந்தார்.அவர் விடுதலையான உடனேயே, கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மீது புகார் அளித்தார். அதில் கிரிக்கெட் வீரர் குடிபோதையில் இருந்ததாகவும், தன்னை மானபங்கப்படுத்தியதாகவும் ஸ்வப்னா புகாரில் தெரிவித்துள்ளார்.

மும்பை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ள ஸ்வப்னா, தனது நண்பர் ஷோபிட் தாக்கூர் கிரிக்கெட் ரசிகர் என்பதால் பிரித்வி ஷாவிடம் செல்பி கேட்க சென்றார். ஆனால் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்த பிரித்வி ஷாவும் அவரது நண்பர்களும் தாக்கூரை துன்புறுத்தினர். இதனை தடுக்க சென்ற என்னையும் தகாத வார்த்தைகளில் பேசியும், தகாத முறையிலும் சீண்டிப்பார்த்தனர் என பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஆயுதங்கள் மூலம் தாக்கியது, உயிருக்கு ஆபத்தை விளைவித்தது என 10 பிரிவுகளின் கீழ் ஸ்வப்னா கில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். எனினும் இது குறித்து போலீசார் இன்னும் எந்தவித வழக்குப்பதிவும் செய்யவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்திவிட்டு,முதற்கட்ட தகவலை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பிரித்வி ஷா மதுபோதையில் இருந்தது உறுதியானால், அவர் மீது வழக்கு திரும்ப அதிக வாய்ப்புகள் உள்ளன.




Next Story