

சாம்ராஜ்நகர்:
சாம்ராஜ்நகர் தாலுகாவில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கட்டிடத்தில், பள்ளி ஆசிரியர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சாம்ராஜ்நகர் மாவட்ட ஆசிரியர்கள் சங்க தலைவர் கே.எஸ்.மாதப்பா கூறியதாவது:-
மாநில அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும். மேலும் ஏற்கனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கவேண்டும். மத்திய அரசின் மாதிரி ஊதிய கொள்கைகளை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தவேண்டும். ஆசிரியர்களின் சம்பள உயர்வு, பணி இடமாற்றம் பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு காணவேண்டும். இதுபோன்று ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேசிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.