பாலியல் வழக்கில் கைதாகி ஆஸ்பத்திரியில் இருந்து ஓடிய கைதி

பாலியல் வழக்கில் கைதாகி ஆஸ்பத்திரியில் இருந்து ஓடிய கைதி பிடிபட்டார். போலீஸ்காரர்களை ஏமாற்றிவிட்டு ஓடியவர், பெண் போலீசாரிடம் சிக்கினார்.
பாலியல் வழக்கில் கைதாகி ஆஸ்பத்திரியில் இருந்து ஓடிய கைதி
Published on

ராமநாதபுரம்,

பாலியல் வழக்கில் கைதாகி ஆஸ்பத்திரியில் இருந்து ஓடிய கைதி பிடிபட்டார். போலீஸ்காரர்களை ஏமாற்றிவிட்டு ஓடியவர், பெண் போலீசாரிடம் சிக்கினார்.

பாலியல் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 42). இவர் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் ராமேசுவரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அவரை அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்து, இரவில் தங்க வைத்திருந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் போலீஸ்காரர்கள் நவநீதன், பேட்ரிக் ஆகியோர் இருந்து கண்காணித்தனர்.

கைதி தப்பி ஓட்டம்

இந்த நிலையில் நேற்று அதிகாலை போலீசாரை நைசாக ஏமாற்றிவிட்டு ஆஸ்பத்திரியில் இருந்து ஆறுமுகம் தப்பி ஓடிவிட்டார். அவர் அங்கிருந்து வெளியேறி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி சாலையில் ஒரு டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது பாலியல் தொல்லைக்கு உள்ளான சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக பெண் போலீசார் லத்திகா, அருணா ஆகியோர் அழைத்து வந்தனர்.

அப்போது, சிறுமி மற்றும் அவருடைய தாயார் ஆகியோர், கைதி ஆறுமுகம் சாலையோரத்தில் நின்று கொண்டிருப்பதை பார்த்து பெண் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதைக்கண்டு பெண் போலீசார் உஷார் அடைந்து, ஆறுமுகத்தை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து போலீசார் ஆறுமுகத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆயுத படைக்கு மாற்றம்

இதற்கிடையே கைதி தப்பி ஓடிய விவகாரத்தில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக போலீஸ்காரர்கள் நவநீதன் மற்றும் பேட்ரிக் ஆகியோரை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com